தூத்துக்குடி கூட்டத்துக்கு ஒரு லட்சம் பேர் கூடுவாங்க - தேமுதிக கொ.ப.செ.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடைபெறும் தேமுதிகவின் பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்ப்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்று மாநில கொள்கைபரப்பு செயலாளர் சந்திரகுமார் கூறியுள்ளார்.
தேமுதிகவின் மாநில கொள்கைபரப்பு செயலாளர் சந்திரகுமார் தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது, தேமுதிகவின் 9வது ஆண்டுவிழா பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் வரும் 22ம் தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தை இங்கு நடத்துவதற்கு என்று தனிப்பட்ட காரணம் ஏதும் இல்லை.
பொதுக் கூட்டமானது தூத்துக்குடி தபால் தந்தி காலனியிலுள்ள தனியாருக்கு சொந்தமான 18 ஏக்கர் பரப்பளவு மைதானத்தில் நடக்கிறது. பொதுகூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், கழக பொருளாளர் இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, துணைச்செயலாளர்கள் முருகேசன், உமாநாத், ஜாகீர்உசேன் உள்ளிட்டவர்கள் பங்கேற்று பேசுகின்றனர். இதற்காக 100அடி நீளம், 40அடி அகலத்தில் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உட்பட மாநிலம் முழுவதும் உள்ள தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துகொள்வார்கள். பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
''2014ன் லட்சியம், 2016ல் நிச்சயம்'' மற்றும் மத்திய அரசை தீர்மானிப்போம், மாநில அரசை வென்றெடுப்போம் என்பதை முன்னிலைப்படுத்தி இக்கூட்டம் நடத்தப்படுகிறது. பொதுக்கூட்டம் நடத்துவதற்கு காவல்துறையினர் வாய்மொழி உத்தரவு அளித்துள்ள நிலையில், முறைப்படியான அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மதுரையில் கட்சி துவக்க விழா நடந்த நிலையில், தென்மாவட்டத்திலுள்ள தொண்டர்களை உற்சாகப்படுத்தி, ஊக்கம் அளித்திடும் விதமாக தூத்துக்குடியில் 9வது ஆண்டு பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.
தேமுதிகவின் இந்த மாபெரும் பொதுக்கூட்டம் தேமுதிகவிற்கு அரசியல் வரலாற்றில் திருப்புமுனையை பெற்றுத்தரும் என்றார். பேட்டியின்போது, மாவட்ட செயலாளர் சண்முகராஜா மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications