ஜெ.வுக்கு சற்றும் பயன் தராது அதிமுகவினரின் போராட்டம்- பழ. நெடுமாறன்
சிதம்பரம்: அதிமுகவினர் நடத்தி வரும் போராட்டத்தால் சிறையில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு கேடுதான் ஏற்படுமே தவிர எந்தப் பயனையும் தராது என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
சிதம்பரம் வந்த பழ. நெடுமாறன் அங்கு நடந்த அமைப்பின் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்த கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார். சட்டரீதியாக முறையிட்டு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதைவிட்டு விட்டு, அதிமுகவினர் வீதிகளில் இறங்கி மக்களுக்கு இடையூரு ஏற்படும் வகையில் பேருந்து கண்ணாடிகளை உடைப்பது, கடை அடைப்பு நடத்துவது தவறானதாகும். பட்டாசு வெடித்து கோயில் கோபுரம் சேதமுற்றுள்ளது.
தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மக்கள் பணிகளை கவனிக்காமல் பெங்களூர் சிறைவாசலில் காத்து கிடக்கின்றனர். அப்படியிருக்கும் போது அரசு அதிகாரிகள் எப்படி செயல்படுவார்கள். இதற்கு அதிமுகவினர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையெனில் மக்கள் ஒன்று கூடி முற்றுப்புள்ளி வைப்பார்கள்.
சட்டம் நீதித்துறை மீது மதிப்பு இருந்தால், அதிமுகவினர் இச்செயலலில் ஈடுபட மாட்டார்கள். இதே நிலை நீடித்தால், சிறையில் உள்ள ஜெயலலிதாவிற்கு பெரும் கேடு விளைவிக்கும்.
அரசு அலுவலகங்களில் பொதுவாக திருவள்ளுவர் படங்களை மட்டுமே வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
மீனவர் பிரச்சனையில் மன்மோகன்சிங் அரசும், மோடி அரசும் தமிழக மீனவர்களை இந்திய குடிமகனாக பார்க்க மறுக்கின்றனர். உலகிலேயே 5வது மிகப்பெரிய கப்பல்படை இந்தியாவுடையது. ஆனால் அவர்கள் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்கின்றனர்.
இல்லையெனில் மத்திய அரசு தமிழக மீனவர்களுக்கு ஆயுத பயிற்சி பெறவும், பாதுகாப்பிற்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும்.
உலகித்திலேயே சமஸ்கிருதம் பேசுபவர்கள் 15 ஆயிரம் பேர்தான். இந்தியஅரசு சமஸ்கிருதத்தை திணிக்க முயன்றால், இந்தி திணிப்புபு போராட்டத்தை விட, மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications