மத்திய அரசு நம்பிக்கை துரோகம்.. ஹைட்ரோகார்பனை எதிர்த்து 2வது நாளாக தீவிரமடைகிறது நெடுவாசல் போராட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது என்று மத்திய அரசு கொடுத்த வாக்குறுதியை மீறியது. இதனால் நெடுவாசலில் தொடங்கிய போராட்டம் 2வது நாளாக தீவிரமடைந்துள்ளது.
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசல் கிராம மக்கள் மீண்டும் போராட்டத்தில் நேற்று குதித்துள்ளனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்கக் கூடாது என்று கோரி 22 நாட்களாக நெடுவாசலில் ஏற்கனவே போராட்டம் நடத்தப்பட்டது. மத்திய மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
கொடுத்த வாக்குறுதியை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக கடந்த 27ம் தேதி தனியார் நிறுவனங்களுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன்படி 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மீண்டும் போர்
இதனால் அதிர்ச்சி அடைந்த நெடுவாசல் மக்கள் இதுகுறித்து ஆலோசனை மேற்கொண்டனர். நெடுவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 70 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 8ம் தேதி நடத்திய கூட்டத்தில் ஹைட்ரோ கார்பனை எதிர்த்து மீண்டும் போராடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.

தொடங்கியது போராட்டம்
இந்த முடிவின் அடிப்படையில், நெடுவாசலில் நேற்று காலை இளைஞர்களும், பெண்களும் போராட்டக்களத்தில் குவிந்தனர். இதையறிந்து சென்ற போலீசார், அவர்களை அங்கிருந்து விரட்டினர். ஆனாலும் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2வது நாள்
நேற்று தொடங்கிய போராட்டம் 2வது நாளாக இன்றும் தொடர்கிறது. இதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் மற்றும் 70 கிராமங்களில் உள்ள வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் என ஒவ்வொன்றாக தொடர உள்ளனர் நெடுவாசல் கிராம மக்கள்.

பதற்றம்
இதனால் புதுக்கோட்டை நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பதற்றம் நிலவி வருகிறது. காவல் துறையினர் போராட்டக் களத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். என்றாலும் பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டக் களத்தில் நின்று உறுதியோடு போராடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications