வாக்காளர்களுக்கு “எலி மருந்து” விநியோகம்- அதிமுகவினர் கைது
நெல்லை: முக்கூடல் அருகே வாக்காளர்களுக்கு எலி மருந்து விநியோகித்த அதிமுகவினர் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லையில் வாக்காளர்களுக்கு டிசர்ட் மற்றும் எலி மருந்து வழங்கியது தொடர்பாக அதிமுகவினர் 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நெல்லை மாவட்டம், முக்கூடலில் முதல்வர் ஜெயலலிதா படம் பொறிக்கப்பட்ட டி-சர்ட்டுகள் மற்றும் எலி மருந்துகள் அடங்கிய துணிப்பை அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு வீடு, வீடாக வழங்கப்படுவதாக பறக்கும்படை தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து தாசில்தார் சங்கரநாராயணன் தலைமையிலான பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அதிமுகவை சேர்ந்த 3 பேர் வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு ஜெயலலிதா படம் பொறித்த டி-சர்ட் மற்றும் எலி மருந்து அடங்கிய துணிப்பையை விநியோகம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களிடமிருந்து 9 டி சர்ட்டுகள் மற்றும் 8 எலி மருந்து பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து முக்கூடல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அதிமுகவை சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட டிசர்ட்டுகள் மற்றும் எலி மருந்துகள் வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக பஞ்சாயத்து நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அவற்றை பஞ்சாயத்து நிர்வாகத்தினர் வழங்காமல் அங்குள்ள குடிநீர் பம்பிங் அறையில் இருப்பு வைத்துள்ளனர். இதனை அறிந்த அதிமுகவினர் பம்பிங் அறையை திறந்து டிசர்ட் மற்றும் எலி மருந்து அடங்கிய 60 துணிப் பைகளை எடுத்து வீடு, வீடாக விநியோகம் செய்தது பறக்கும்படை அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தேர்தலுக்குதான் இன்னும் பலநாட்கள் இருக்கிறதே, இந்த எலி மருந்து தேர்தல் முடிவு தெரிந்தபின்புதான் எங்களுக்கு தேவைப்படும் என்று மக்கள் கிண்டலாக பேசிக் கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications