சவுதியில் தவிக்கும் நெல்லை பெண் - மீட்க கோரி சகோதரர் கலெக்டரிடம் மனு
நெல்லை: நெல்லையில் வீட்டு வேலைக்கு சவுதி அரேபியாவுக்கு சென்ற நெல்லை பெண் அங்கு சித்ரவதை அனுபவித்து வருவதால் அவரை மீட்க கோரி அவரது சகோதரர் மனு கொடுத்துள்ளார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் அரிகேசவ நல்லூரை சேர்ந்தவர் சுலைமான் சேட். இவர் தனது சகோதரி மகன் ஜாபருடன் சேர்ந்து கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு கலெக்டரிம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, "எனது சகோதரி சுலைமாள், சீர்காழியை சேர்ந்த அன்புராஜ் என்ற முகவர் மூலம் கடந்த மே மாதம் சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்கு சென்றார்.
அங்கு இரண்டு மாதங்களாக ஒரு வீட்டில் வேலை பார்த்து வந்தார். பின்னர் வெவ்வேறு இடங்களில் வீட்டு வேலைக்கு அவரை அனுப்பி வைத்தனர். மேலும் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பாஸ்போர்டை பறித்து வைத்து கொண்டனர். மேலும் அவருக்கு பாலியல் கொடுமை செய்துள்ளனர். இதனை எனது சகோதரி அங்குள்ள மற்றொரு தொழிலாளி செல்போன் மூலம் தெரிவித்தார்.
இதனை தெரிந்து கொண்ட அங்குள்ள குடும்பத்தினர் எனது சகோதரியை அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். அவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரத்த வாந்தி எடுத்ததாகவும் ஆனால் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்காமல் இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. எனவே எனது சகோதரியை மீட்டு தரவேண்டும்" என அதில் கூறியிருக்கிறார். இம்மனுவால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.