குதிரை வண்டியில் மாப்பிள்ளையும், பொண்ணும்.. மாட்டு வண்டியில் உறவினர்கள்.. பாரியூரில் கலகல!
மாட்டு வண்டியில் மணமக்கள் ஊர்கோலமாக சென்ற திருமணம் அனைவரையும் ஈர்த்தது.
ஈரோடு: எவ்வளவு படித்தாலும் சிலர் இன்னும் நம் பாரம்பரியத்தை மறக்காமல் உள்ளது உண்மையிலேயே மகிழ்ச்சியாக உள்ளது.
கோபி அருகே உள்ள பா.வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் கவிஅரவிந்த். இவர் ஒரு பி.இ. பட்டதாரி. இந்த படிப்பை படித்து முடித்ததும் பெரும்பாலானோர் சென்னை, பெங்களூர் போன்ற சிட்டிகளுக்கு சென்று வேலை தேடி புறப்பட்டுவிடுவார்கள்.
ஆனால் கவி அரவிந்த் அப்படி செல்லவில்லை. தனது சொந்த கிராமத்தில் அப்பாவுடன் சேர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். இதில் கடுமையாக உழைத்து முன்னுக்கும் வந்துள்ளார்.

கவலையே படவில்லை
தன்னுடன் ஒத்தாசையாக இருந்து பாடுபட்டு வரும் இந்த படித்த பிள்ளைக்கு கல்யாணம் செய்யலாம் என கவிஅரவிந்த் அப்பா முடிவெடுத்தார். அதற்காக பெண் தேட ஆரம்பித்தார்கள். ஆனால் கவிஅரவிந்த் விவசாயம் என்பதால் யாருமே பெண் கொடுக்க முன்வரவில்லை. இந்த விவசாயத்தினால் தனக்கு திருமணம் தடைபடுகிறதே, ஒரு பெண்ணுக்கும் நம்மை கல்யாணம் செய்ய மனசு வரலையே என்றெல்லாம் கவி அரவிந்த் கவலையே படவில்லை.

மணப்பெண் பிரவீணா
தொடர்ந்து விவசாயத்திலேயே கவனம் செலுத்தி கொண்டிருந்தார். ஆனால் அவரது அப்பாதான் மகனுக்கு பெண் பார்க்கும் படலத்தை விடவில்லை. கடைசியில் அத்தாணியை சேர்ந்த பிரவீணா, மாப்பிள்ளை ஒரு விவசாயி என்பதை அறிந்து மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தார். பிரவீணா ஒன்றும் அவ்வளவு சாதாரணமான பெண் இல்லை. அவரும் எம்.சி.ஏ படித்துள்ளார். சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலையும் பார்த்து வருகிறார்.

சாரட் வண்டி
பெண், மாப்பிள்ளை இருவரின் முழு சம்மதத்துடன், திருமணம் நேற்று காலை பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயிலில் பெரியவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. திருமணம் முடிந்த பிறகு, மணமக்களை ரோஜா பூக்களால் அலங்கரிக்கப்பட்ட படகு போன்ற காரில் அழைத்து செல்வார்கள் என்று பார்த்தால், ஒரு குதிரை வண்டி வந்து அங்கு நின்றது. அதில் பொண்ணும், மாப்பிள்ளையும் அந்த குதிரை பூட்டிய சாரட் வண்டியில் ஏறிக் கொண்டனர்.

நாட்டு மாடுகள்
பத்துக்கும் மேற்பட்ட மாட்டு வண்டியில் உறவினர்கள் ஏறிக் கொண்டனர். பின்னர், பாரியூரில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெள்ளாளபாளையத்திற்கு அனைவரும் ஊர்கோலமாக சென்றனர். பின்னர் மணமகளின் வீட்டில் மணப்பெண்ணை விட்டு விட்டு அனைவரும் திரும்பி வந்தனர். இது குறித்து கல்யாண வீட்டுக்காரர்கள், "நாட்டு மாடுகள் நமது பாரம்பரிய சொத்து. இதை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தான் இந்த ஊர்வலம்'' என்று விளக்கமும் அளித்தனர்.

செல்போனில் படம்
வழியெல்லாம் கல்யாண வீட்டுக்காரர்கள் ஒரே அமர்க்களம்தான். பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தை பொதுமக்கள் எல்லோருமே சென்று வாழ்த்து தெரிவித்தனர். புதுமண ஜோடியின் மாட்டு வண்டி ஊர்வலத்தை கண்ட அனைவருமே, ஆச்சரியத்துடன் தங்களது செல்போனில் படம்பிடித்து கொண்டனர். பெரிய படித்து முடித்தாலும் விவசாயத்தை இன்றைய காலகட்டத்திலும் மதிக்கும் இந்த இளஞ்சோடிகளுக்கு நாமும் வாழ்த்துக்களை தெரிவிப்போம்!












Click it and Unblock the Notifications