நண்பேன்டா போய் பரம எதிரிகளாக மோதும் விவேக் vs ஜெயானந்த்!
சசிகலா குடும்பத்தின் அடுத்த தலைமுறையும் அதிகார போட்டியில் குதித்துள்ளது. இளவரசி மகன் விவேக், திவாகரன் மகன் ஜெயானந்த் இடையேயான மோதல்தான் இப்போது அதிமுகவில் ஹாட் டாபிக்
சென்னை: ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை நண்பர்களாக வலம் வந்த இளவரசி மகன் விவேக்கும் திவாகரன் மகன் ஜெயானந்தும் இப்போது பரம எதிரிகளாகிவிட்டனர். நிழல் அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்கிற போட்டியில்தான் இருவரும் எதிரிகளாக மோதி வருகின்றனர்.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது போயஸ் கார்டனில் விவேக் செல்வாக்குடன் வலம் வந்தார். அதேநேரத்தில் திவாகரன் மகன் ஜெயானந்தும் எப்படியும் ஜெயலலிதா தம்மையும் சேர்த்துக் கொள்வார் என நம்பிக்கையோடு காத்திருந்தார்.
ஜெயலலிதா மறைந்த நிலையில் ஒட்டுமொத்த சசிகலா குடும்பமும் வெளிப்படையாகவே அதிமுகவை கைப்பற்றும் கோதாவில் குதித்தது. சசிகலா தலைமையிலான இந்த முயற்சியில் நடராஜன், திவாகரன், தினகரன், வெங்கடேஷ் என பலரும் முட்டி மோதினர்.
கடும் எதிர்ப்பு
ஆனால் சசிகலா குடும்பத்துக்கு ஒட்டுமொத்த தமிழகமே கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் வேறுவழியே இல்லாமல் சசிகலா மட்டும் தலையெடுக்க தொடங்கினார். அதேநேரத்தில் டிடிவி தினகரன், வெங்கடேஷ் ஆகியோரை சசிகலா தம்முடன் வைத்துக் கொண்டார்.
இளவரசி கோஷ்டி போர்க்கொடி
சசிகலா தரப்பு கை ஓங்கிய நிலையில் இளவரசியும் அவரது மகனும் கட்சியில் தங்களுக்கும் பொறுப்பு வேண்டும் என போர்க்கொடி தூக்கினர். இந்த நிலையில் சசிகலா சிறைக்கு செல்ல நேரிட்டது. இப்போது டிடிவி தினகரனின் ஆட்டம் தொடங்கியது.
விவேக்- ஜெயானந்த்
சிறைக்குப் போன சசிகலா, இளவரசியை சென்று பார்க்கும் வேலைகளில் படுபிஸியாக இருக்கிறார் விவேக். அதேபோல் திவாகரன் மகன் ஜெயானந்தும் சசிகலாவை சிறைக்கு சென்று பார்த்து வருகிறார்.
ஜெயானந்த் புறக்கணிப்பு
ஆனால் விவேக்கிடமே பல விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் சசிகலா, ஜெயானந்தை கண்டு கொள்வதே இல்லையாம். ஜெயானந்த் என்ன சொன்னாலும் அதை தட்டிக் கழிப்பதில்தான் சசிகலா தீவிரமாக இருக்கிறாராம். இந்த நிலையில் விவேக்கின் சட்ட படிப்பு தொடர்பான சர்ச்சை வெடித்துள்ளது.
சர்ச்சையில் விவேக்
இந்த சர்ச்சைக்கு காரணமே ஜெயானந்த் என்றே விவேக் தரப்பு கருதுகிறது. ஒருகாலத்தில் விவேக்கும் ஜெயானந்தும் நண்பர்களாக வலம் வந்தவர்கள்...இப்போது அதிகாரத்தை முன்வைத்து எதிரிகளாக விஸ்வரூபமெடுத்து நிற்பது சசிகலா குடும்பத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாம்.