என்னதான் சொல்ல வருகிறது எய்ம்ஸ், அப்பல்லோ மருத்துவ அறிக்கைகள்?
சென்னை: எய்ம்ஸ் மற்றும் அப்பல்லோ அறிக்கைகளை மேற்கோள் காட்டி தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக சொல்லிக்கொள்ள எந்த தகவலுமே இல்லை.
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் நிலவுவதால் வதந்திகள் றெக்கை கட்டி பறக்க ஆரம்பித்துள்ளன. வரும் 8ம் தேதி ஓ.பன்னீர்செல்வம், நீதி கேட்டு உண்ணா விரதம் இருக்கப்போவதாக அறிவித்தார்.
(ஜெ. சிகிச்சை: தமிழக அரசு வெளியிட்ட அப்பல்லோ மருத்துமனை. எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கைகள்)

இந்த சூழ்நிலையில், இன்று எய்ம்ஸ் மற்றும் அப்பல்லோ ஆகிய மருத்துவமனைகளிடம் அறிக்கை பெற்று அதை வெளியிட்டுள்ளது தமிழக சுகாதாரத்துறை.
இந்த அறிக்கை குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், இரு அறிக்கைகளிலுமே எந்த புது தகவலும் இல்லை. அப்பல்லோ நல்ல சிகிச்சை கொடுத்துள்ளது என்று எய்ம்ஸ் பாராட்டியது, காவிரி பிரச்சினை குறித்து ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபடியே ஆலோசித்தார் என்பது போன்றவை எதையோ தமிழக அரசு நிரூபிக்க விளைவுவது போல உள்ளது.
இந்த அறிக்கைகளை ஜெயலலிதா மறைந்த உடனேயே வெளியிட்டிருக்கலாமே என்ற கேள்வி நியாயமாகவேபடுகிறது. இத்தனை மாதம் கழித்து, பல சந்தேகங்களை உள்வாங்கிக் கொண்ட பிறகு அதற்கு விடையளிப்பதற்காக தயாரிக்கப்பட்ட அறிக்கை போல உள்ளதாக சமூக வலைத்தளங்களில் மக்கள் கருத்து கூறுவதும் யோசிக்க வேண்டியதே.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது ஜெயலலிதா காயமடையவில்லை, அவருக்கு முன்னதாக தவறான மருந்துகள் கொடுக்கப்படவில்லை என்றெல்லாம் இம்மருத்துவமனைகள் ஏன் குறிப்பிட்டு சொல்ல வேண்டும்? கேள்வித்தாள் அவுட்டானதை வைத்து விடை எழுதும் பள்ளி மாணவர்களின் விடைத்தாளை போல உள்ளது இவ்விரு அறிக்கைகளும் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
செப்டம்பர் 22ம் தேதி மருத்துவமனையில் சேர்த்தார்கள், டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா இறந்தார்.. என்ற இந்த தகவலைத்தான் சுற்றி சுற்றி பல பக்க அறிக்கையாக கொடுத்துள்ளது தமிழக அரசு என்பதே நிதர்சனம்.












Click it and Unblock the Notifications