புதிய கட்டடங்கள் திறக்கப்பட்டும்.. வராண்டாக்களில் இயங்கும் அரசுப்பள்ளிகள்.. கிருஷ்ணகிரியில் அவலம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள 3 அரசுப்பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களின் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரையில் 3 அரசு பள்ளிகளில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்த புதிய கட்டடங்கள் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஊத்தங்கரை தொகுதிக்கு உட்பட்ட ராமகிருஷ்ணபதி, திருவனப்பட்டி, கொட்டுக்காரன்பட்டி ஆகிய இடங்களில் உள்ள 3 அரசு பள்ளிகள் கடந்த 2011ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.
இதனால் போதிய இடவசதி இன்றி மாணவர்கள் தவித்த நிலையில், கூடுதலாக கட்டடங்கள் கட்டப்பட்டன. கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், புதிய கட்டடங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஏப்ரல் மாதம் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்தப் புதிய கட்டடங்கள் அடுத்த சில நாட்களிலேயே பயன்பாட்டுக்கு வரும் என்று மாணவ மாணவிகள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், இதுவரை புதிய கட்டடங்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளன.
மின்சார வசதி அமைக்காததால் கட்டடங்கள் திறக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. புதிய கட்டடங்களில் படிக்க ஆவலுடன் இருக்கும் மாணவர்கள், மீண்டும் தொடக்கப்பள்ளிகளின் வராண்டாக்களில் பயிலும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.