சென்னை நட்சத்திர ஹோட்டல்களில் இந்தாண்டு புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ரத்து!
சென்னை: சென்னையில் இந்தாண்டு புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் இல்லை என நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் பெய்த வடகிழக்கு பருவமழைக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டன. வரலாறு காணாத வகையில் கொட்டித் தீர்த்த கனமழையின் பாதிப்பில் இருந்து சென்னை மக்கள் மீண்டு இயல்பு நிலைக்கு வர இன்னும் சில காலம் ஆகும். பல இடங்களில் இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பாததால் இந்தாண்டு நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர்கள் கூறுகையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களின் மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இன்னமும் சகஜ நிலைக்குத் திரும்பாத நிலையில் உள்ளனர். இந்நிலையில் இவர்களின் துயரத்தில் பங்கேற்கும் விதமாக தங்களது நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் இல்லை என்று தெரிவித்தனர்.
அதோடு இவர்கள் சென்னை மாநகர காவல்துறையினரிடம் தடையில்லா சான்றிதழ் கேட்டு விண்ணப்பபம் அளிக்க வேண்டும். அவர்கள் சான்றிதழ் கொடுக்கும் பட்சத்தில்தான் விடுதிகள் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் .நடத்த முடியும். ஆனால், இந்த விடுதிகளில் ஒரு விடுதியிடமிருந்து கூட அதுமாதிரியான விண்ணப்பம் வரவில்லை என்று சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
புத்தாண்டுக் கொண்டாட்டங்களை விரும்பும் இளைஞர் பட்டாளம் பெங்களூரு நோக்கி படை எடுக்கின்றனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இரவு 1 மணிக்குள் முடித்துவிட வேண்டும் என்றும் மதுபான கடைகளை இரவு 11.30 மணிக்குள் மூடவும் பெங்களூரு காவல் கண்காணிப்பாளர் மேகரின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications