மசக்கை வாந்தி எடுக்கவேண்டிய புதுப்பெண் எடுத்ததோ “ரத்த” வாந்தி - கணவன், மாமியார் மீது புகார்!
குலசேகரம்: குலசேகரத்தில் திருமணமான 36 நாளில் வலுக்கட்டாயமாக மருந்து கொடுக்கப்பட்ட புதுப்பெண் ரத்த வாந்தி எடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது தந்தை, அப்பெண்ணின் கணவர், மாமியார் மேல் புகார் அளித்துள்ளார்.
குமரி மாவட்டம் கோட் டார் பகுதியை சேர்ந்தவர் நிவேதாகுமாரி. டிப்ளமோ படித்துள்ளார். இவரது தந்தை ஐயப்பன், தாய் அனிதா. நிவேதாவுக்கு கடந்த 36 நாட்களுக்கு முன் பளுகல் பகுதியை சேர்ந்த சஜீவ் என்பவருடன் திருமணம் நடந்தது.
அவர் துபாயில் ஆயில் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். திருமணத்தின்போது 40 பவுன் நகை, ரூபாய் 70 ஆயிரம் சீர்வரிசை பொருட்கள் கொடுத்துள்ளனர். திருமணம் முடிந்ததும் நிவேதாகுமாரியை சஜீவ் அவரது தாய் பேபி என்ற செல்லம் ஆகியோர் துன்புறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன் குலசேகரம் பொன்மனையில் உள்ள ஒரு மந்திரவாதி வீட்டிற்கு அழைத்து சென்று ஏதோ மருந்து வாங்கி கொடுத்துள்ளனர். அதை குடிக்க நிவேதா மறுத்துள்ளார். அவரது கணவர் மற்றும் மாமியார் சேர்ந்து அவரை மிரட்டி குடிக்க வைத்துள்ளனர். மருந்து குடித்த சிறிது நேரத்தில் அவர் ரத்த வாந்தி எடுத்துள்ளார். உடல் நிலை பாதிக்கப்பட்ட அவர் அன்று இரவு தனது தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஐயப்பன் பளுகல் சென்று மகளை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக நிவேதாவின் பெற்றோர் குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் நடவடிக்கை எடுக்காததால் அவர்கள் மாவட்ட எஸ்.பி.யை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்துள்ளனர்.