காதலன்தான் வேண்டும்.. திருமணமான 10-ஆவது நாளே கூலிப்படையை ஏவி கணவனை போட்டு தள்ளிய சரஸ்வதி
திருமணமான 10-ஆவது நாளிலேயே கூலிப்படையை ஏவி கணவனை கொன்ற பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
Recommended Video

ஸ்ரீகாகுளம்: கணவனை பிடிக்காததால் திருமணம் ஆன 10-ஆவது நாளே கூலிப்படையை ஏவி கணவனை கொலை செய்த மனைவி உள்பட 6 பேரை ஆந்திரா போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீகாகுளம் மாவட்டம் வீரகாட்டம் மண்டலம் , செட்டபடி வலசு கிராமத்தை சேர்ந்தவர் கவுரி சங்கர் ராவ். இவருக்கும் தனது அக்காள் மகளான விஜயநகரத்தை சேர்ந்த சரஸ்வதிக்கும் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை இரவு பார்வதிபுரத்திற்கு புதுமண தம்பதி சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது கருகுப்பள்ளி அருகே கவுரி சங்கர் வண்டியை நிறுத்தியபோது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் வழிமறித்தனர்.

நகைகள் திருட்டு
அப்போது அங்கு வந்த 3 பேர் இரும்புக் கம்பியால் கவுரி சங்கரை கடுமையாக தாக்கியதில் அவர் ரத்த வெள்ளத்தில் பலியானார். பின்னர் சரஸ்வதியையும் தாக்கி அவரிடம் இருந்த நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதையடுத்து பதற்றத்துடன் கணவனின் சடலத்தின் அருகே அழுது கொண்டிருந்த சரஸ்வதி நடந்தவை குறித்து உறவினர்களிடம் கூறியுள்ளார்.

காவல் துறைக்கு தகவல்
சம்பவ இடத்துக்கு வந்த உறவினர்கள் லேசான காயம் அடைந்த சரஸ்வதியை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து காவல் துறை கண்காணிப்பாளர் பால்ராஜ், சரஸ்வதியிடம் விசாரணை நடத்தினார். அப்போது தாய்மாமனான கணவர் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்ததாகவும் எனினும் திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும் சரஸ்வதி கூறினார்.

வாக்குமூலம்
இந்த பாயிண்டை அலேக்காக பிடித்து கொண்ட காவல் துறை அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தியது. அதில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினார். இதையடுத்து சரஸ்வதியிடம் போலீஸார் மேற்கொண்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் நடந்தவற்றை தெரிவித்தார். இதை போலீஸார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.

காதல்
போலீஸாரிடம் சரஸ்வதி கூறுகையில் எனக்கு படிப்புக்கு தேவையான அனைத்து பணஉதவிகளையும் மாமா கவுரி சங்கர் செய்தார். கல்லூரி படிப்பை முடித்தவுடன் விசாகப்பட்டினத்தில் தங்கி 3 ஆண்டுகள் பயிற்சிக்கு சென்ற போது அங்கு சிவா என்பவருடன் சரஸ்வதிக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலிக்கத் தொடங்கிவிட்டனர்.

திருமண ஏற்பாடு
இதனிடையே கவுரி சங்கர் செய்த உதவிக்கு நன்றிக் கடனாக சரஸ்வதியை அவருக்கு திருமணம் செய்து வைக்க பேச்சுவார்த்தை நடந்தது. இதை எவ்வளவோ தடுத்தும் பெண்ணின் தாயார் கேட்கவில்லை. தாய் மாமனை திருமணம் செய்து கொண்டு கிராமத்தில் வாழ பிடிக்கவில்லை. எனவே சிவாவை திருமணம் செய்து கொண்டு விசாகப்பட்டினத்தில் வாழ முடிவு செய்தேன். திருமண ஏற்பாடு குறித்து சிவாவிடம் தெரிவித்த போது திருமணத்துக்கு ஒப்புக் கொள், பின்னர் போட்டு தள்ளிவிடலாம் என ஐடியா கொடுத்தார்.

ரூ.8000 முன்பணம்
அதன்பேரில் கவுரி சங்கரை கொல்ல கூலிப்படையான மெருகு கோபி, பங்கராஜூ, சரிபள்ளி ராமகிருஷ்ணா மற்றும் தேவாரப்பள்ளி கிஷோர் உள்ளிட்டோரை அணுகி முதல் கட்டமான ரூ.8 ஆயிரத்தை கொடுத்தேன். வேலை முடிந்தவுடன் திருமணத்துக்கு போட்ட நகைகளை கொடுப்பதாக கூலிப்படையினரிடம் உறுதி அளித்தேன்.

6 பேர் கைது
அவர்கள் சொன்னது போல் கருகுப்பள்ளி அருகே வந்து கொண்டிருந்தபோது மாமாவிடம் சொல்லி வண்டியை நிறுத்தினேன். அப்போது அங்கு மறைந்திருந்த கூலிப்படையினர் கவுரி சங்கரை இரும்புக் கம்பியால் அடித்து கொன்றனர் என்றார் சரஸ்வதி. இதையடுத்து போலீஸார் சரஸ்வதி உள்ளிட்டோரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications