தண்ணீர் லாரி மோதி 3 மாணவிகள் பலி: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
சென்னை: சென்னை, கிண்டியில் தண்ணீர் லாரி மோதிய விபத்தில் 3 கல்லூரி மாணவிகள் உயிரிழந்தது தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை கிண்டி மேம்பாலம் அருகே சாலையை கடக்க முயன்ற சென்னை செல்லம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகள் 3 பேர் மீது எதிரே வந்த தண்ணீர் லாரி மோதியதில் மூன்று மாணவிகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து விளக்கம் அளிக்க கோரி தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், விபத்து குறித்து, தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., ஆகியோர் 4 வாரங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் லாரிகளால் நடந்த விபத்துக்கள் குறித்த தகவலையும் சமர்பிக்க வேண்டும் எனவும் மோட்டார் வாகன சட்டப்படி விபத்துக்கு காரணமான ஓட்டுநரின் உரிமம் ரத்து செய்யப்படுமா என்ற விவரத்தையும் சமர்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் எதிர் காலத்தில் இதுபோன்ற விபத்துக்கள் நடக்காமல் இருக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? என்பது குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அந்த நோட்டீஸில் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications