துக்கம் விசாரித்துவிட்டு திரும்புகையில் வேன் மீது லாரி மோதி விபத்து: 9 பேர் பலி
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த வேன் மீது லாரி பயங்கரமாக மோதியதில் ஒரு வயது குழந்தை உள்பட 9 பேர் பலியாகினர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இருக்கன்குடியை சேர்ந்தவர்கள் தூத்துக்குடியில் உள்ள புதியம்புத்தூரில் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு வேனில் ஊர் திரும்பினர். வேன் தூத்துக்குடி அருகே உள்ள தாப்பாத்தி என்ற கிராமத்தில் செல்கையில் டயர் பஞ்சர் ஆனது.
இதையடுத்து டிரைவர் டயரை மாற்ற வேனில் இருந்தவர்கள் வெளியே வந்து வாகனத்தின் முன்பு சாலையில் அமர்ந்திருந்தனர். அப்போது அந்த வழியாக நிலக்கரி ஏற்றி வந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேனின் பின்புறம் பயங்கரமாக மோதியது.
இதில் சாலையில் அமர்ந்திருந்தவர்கள் மீது வேன் ஏறியது. இதில் ஒரு வயது குழந்தை உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயம் அடைந்த 4 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதில் மகேந்திரன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.