திமுக, அதிமுக கூட கூட்டணி சேர மாட்டேன் மக்களே... அடித்துச் சொன்ன விஜயகாந்த்
மயிலாடுதுறை: அதிமுக, திமுகவுடன் ஒருபோதும் தேர்தல் கூட்டணி வைக்க மாட்டேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் உறுதியாக தெரிவித்துள்ளார். எக்காரணத்தை முன்னிட்டும் ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது என்றும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மண்ணிப்பள்ளம் கிராமத்தில் தே.மு.தி.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் தே.மு.தி.க நிறுவனத் தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் கலந்து கொண்டு ரூ.10 லட்சம் மதிப்பில் 60 பயனாளிகளுக்கு தையல் எந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.விழாவில் பேசிய விஜயகாந்த் வழக்கம் போல அதிமுக அரசை குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் தமிழில் படிக்க சொல்கிறார்கள். ஆனால் தமிழில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. அவர்களுக்கு எந்த முன்னேற்றமும் இல்லை என்றார்.

தங்கம் விலை போல
விலைவாசியை குறைப்பேன் என்று கூறி ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். ஆனால் நான்கரை ஆண்டில் விலைவாசி பன்மடங்கு உயர்ந்துவிட்டது. தங்கம் விலைக்கு நிகராக பருப்பு விலை உயர்ந்துள்ளது.

ஆட்சிக்கு வர விடக்கூடாது
சட்டசபையில் மக்கள் பிரச்சினை பற்றி பேச எழுந்தால் எங்களை பேச விடுவதில்லை. எதற்கெடுத்தாலும் என் மீது வழக்கு போடுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். எக்காரணத்தை முன்னிட்டும் ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது.

கொடநாட்டில் பதுங்கிய ஜெ
மக்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் கொடநாட்டில் பதுங்கி விட்டார். பஸ் கட்டணம், பால் கட்டணத்தை உயர்த்திய ஆட்சியை வர விடக்கூடாது.

அரசை துரத்துவோம்
பணத்தை கொடுத்து ஓட்டுக்களை வாங்கி விடலாம் என்று இருக்கிறார்கள். நான் வரும் வழியெல்லாம் சாலைகள் படுமோசமாக இருந்தது. மின்சாரம் கிடையாது. அதை சரி செய்யாத அரசை துரத்த வேண்டும். அதிமுக, திமுகவுடன் ஒருபோதும் தேர்தல் கூட்டணி வைக்க மாட்டேன் என்றும் விஜயகாந்த் கூறினார்.












Click it and Unblock the Notifications