நான் பிரதமராக ஒருபோதும் விரும்பியதில்லை: ப.சிதம்பரம்
சென்னை: நாட்டின் பிரதமராக வேண்டும் என்று ஒருபோதும் தாம் விரும்பியதில்லை என்று நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
8 லோக்சபா தேர்தல்களை சந்தித்த ப.சிதம்பரம் இம்முறை தமது சிவகங்கை தொகுதியை மகன் கார்த்திக்காக விட்டுக் கொடுத்திருக்கிறார். இருப்பினும் காந்திய வழியில் அரசியலில் ஈடுபடுவேன் என்றும் ப.சிதம்பரம் கூறி வருகிறார்.

இந்நிலையில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ப.சிதம்பரம் கூறியதாவது:
நான் அடிப்படையில் வழக்கறிஞர்தானே தவிர பொருளாதார வல்லுநர் அல்ல. என்னைப் பொறுத்தவரையில் ஒருபோதும் நாட்டின் பிரதமராக வேண்டும் என்று விரும்பியதில்லை. ஏனெனில் என்னுடைய வரம்பு எது என்று எனக்குத் தெரியும்.
கடந்த 10 ஆண்டுகாலமாக ஒருநாளைக்கு 16 முதல் 18 மணி நேரம் உழைத்திருக்கிறேன்.. எனக்கான நேரம் இப்போது என உணருகிறேன். நான் ஒரு மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதி. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை எப்போதுமே பிரதமர் பதவி என்பது இந்திரா குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குத்தான்.. அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் ராகுல் காந்திதான் பிரதமர் என்பதில் எந்த ஒரு சதேகமும் இல்லை. பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஊடகங்களில் நேரடி விவாதத்துக்கு வருவதே இல்லையே ஏன்?
இவ்வாறு சிதம்பரம் கூறினார்.












Click it and Unblock the Notifications