டாஸ்மாக் விற்பனையில் மட்டுமே தமிழகம் முதலிடம்- விஜயகாந்த் தாக்கு
திருவள்ளூர்: குஜராத்தை விட தமிழகம் சிறந்த மாநிலம் என்று ஜெயலலிதா கூறுகிறார். ஆனா டாஸ்மாக் விற்பனையில் மட்டுமே தமிழகம் முதன்மையான மாநிலமாக உள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.
திருவள்ளூர் (தனி) லோக்சபா தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் யுவராஜை ஆதரித்து, அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் வாக்கு சேகரித்தார் அப்போது அவர் பேசியதாவது:
மக்கள் ஜாதி மத பேதம் பார்க்காமல் அனைவரும் சமம் என எண்ணி ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
வானவில் கூட்டணி
தமிழகத்தில் தற்போது பாஜக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி மிகவும் வலுவான கூட்டணி. இந்த கூட்டணிக்கு தமிழகம் முழுவதும் மிகுந்த எழுச்சி ஏற்பட்டுள்ளது.
தடையில்லா மின்சாரம்
எனவே இக்கூட்டணி கட்டாயம் வெற்றிபெறும். மோடி பிரதமரானால் தடையில்லா மின்சாரம், விவசாயத்துக்கு தண்ணீர், மக்களுக்கு குடிநீர் ஆகியவை கிடைக்கும்.
கடந்த 10 ஆண்டுகாலமாக தமிழகத்தை திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்தன. ஆனால் தமிழகம் எவ்விதத்திலும் வளர்ச்சியும் அடையவில்லை.
டாஸ்மாக் விற்பனையில்
குஜராத்தை விட சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்று ஜெயலலிதா கூறி வருகிறார். டாஸ்மாக் விற்பனையில் மட்டுமே தமிழ்நாடு முதன்மையான மாநிலமாக திகழ்கிறது.
இறால் மீன் ருசி தனி
செங்குன்றம் வந்தாலே எனக்கு பழைய ஞாபகம் வரும். ஏனென்றால் இங்கு அரிசி ஆலைகள் அதிகம். இந்த ஆட்சியிலே தொழில் வளம் நலிவடைந்துள்ளது. செங்குன்றத்தில் இறால் மீன் உணவு ருசியாக இருக்கும். நான் பலமுறை சாப்பிட்டுள்ளேன்.
மீனவர்கள் பிரச்சினை
செங்குன்றத்துக்கு அருகில் உள்ள பழவேற்காட்டில் மீனவர்கள் ஒருவரையொருவர் அடித்துக்கொள்கின்றனர். அதை இந்த அரசால் தடுக்க முடியவில்லை.
வாக்காளர்களுக்கு பணம்
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஜெயித்து விடலாம் என்று நினைக்கிறார்கள். பால் பாக்கெட் கொடுக்கும்போதும் நாளிதழ்கள் கொடுக்கும்போதும் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. இது சம்பந்தமாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கலாம் என நினைத்தால் அவர்கள் போனை எடுப்பது இல்லை.
சொத்துப்பட்டியல்
மாநிலம் முழுவதும் சாலைகள் மோசமான நிலையில் உள்ளன. ஜெயலலிதாவின் சொத்துப் பட்டியலை கலைஞர் டிவியிலும், திமுகவினர் சொத்துப் பட்டியலை ஜெயா டிவியிலும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த இரண்டு டிவிக்களை பார்த்தால் அக்கட்சியினரின் சொத்து மதிப்பை அறிந்துக் கொள்ளலாம்.
ஆளுங்கட்சி ஆதரவு
நான் சாதி மதம் பார்ப்பதில்லை. அதனால் என்ன பயன் என்பதை உணர்ந்தவன். தமிழக போலீசாரை ஜெயலலிதா பயமுறுத்தி வைத்துள்ளார். ஆளும் கட்சி ஆதரவாளர்களாக போலீசார் பயன்படுத்தப்படுகிறார்கள். இந்த நிலையெல்லாம் மாற்றப்பட வேண்டும்.
டெசோ மாநாடு
நரேந்திரமோடி பிரதமரானால் இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பார். கருணாநிதி டெசோ மாநாடு நடத்தி வருகிறார். டெசோ இயக்கம் வாஜ்பாய் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது.
பாஜக கூட்டணி அலை
நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறேன். எங்கு பார்த்தாலும் பாரதீய ஜனதா கூட்டணி அலை வீசுவதை பார்த்தால் மோடி பிரதமராவது உறுதியாகி விட்டது. திருவள்ளூர் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் யுவராஜுக்கு 'முரசு' சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.