உணவு இன்றி தவிக்கும் மக்கள்.. தண்ணீர் குடித்து உயிர் வாழும் பத்திரிக்கையாளர்கள்.. தூத்துக்குடி அவலம்
தூத்துக்குடி படுகொலை காரணமாக மக்கள் உணவு இன்றி கஷ்டப்பட்டு வருகிறார்கள். யாரும் வெளியே செல்ல முடியாமல் முடங்கியுள்ளனர்.
Recommended Video

தூத்துக்குடி: தூத்துக்குடி படுகொலை காரணமாக மக்கள் உணவு இன்றி கஷ்டப்பட்டு வருகிறார்கள். யாரும் வெளியே செல்ல முடியாமல் முடங்கியுள்ளனர். செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களும் தண்ணீர் குடித்து உயிர் வாழ்ந்து கொண்டுள்ளனர்.
மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அமைதிப் பேரணியை நடத்திய பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. போலீசின் இந்த கண்மூடி தனமாக தாக்குதல் காரணமாக இதுவரை 14 பேர் பலியாகி உள்ளனர். ஆனாலும் இதைவிட அதிக பேர் பலியாகி இருக்கலாம் என்று அச்சமூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை அதிகாரப்பூர்வமாக 13 பேர் மரணம் அடைந்துள்ளனர். 25க்கும் அதிகமானோர் என்ன ஆனார்கள், எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இதில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் சிலர் மிகவும் மோசமான நிலையில் கவலைக்கிடமாக உள்ளனர்.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு
அங்கு போலீஸ் நடத்திய கொடூரத்தால் இயல்பு வாழ்க்கை மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவே பயந்து கொண்டு இருக்கிறார்கள். முக்கியமாக ஆண்கள் வீட்டிற்குள்ளே முடங்கி இருக்கிறார்கள். எல்லா தெருக்களிலும் போலீஸ் துப்பாக்கிகளுடன் நின்று கொண்டு இருக்கிறார்கள்.

கடைகளும் கிடையாது
இதனால் அங்கு மொத்தமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு எந்த கடையும் கடந்த மூன்று நாட்களாக திறக்கவில்லை. எந்த வீடுகளிலும் பெரும்பாலும் குடிக்க கூட தண்ணீர் இல்லை. மூன்று நாட்களுக்கு முன் பிடித்த தண்ணீரை வைத்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். மாநகராட்சி தண்ணீரும் வரவில்லை, மின்சாரம் இல்லாததால் போர் தண்ணீரும் கிடையாது, இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது.

உள்ளே வெளியே செல்ல முடியாது
அங்கே 144 தடை சட்டம் பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், யாரும் ஊரை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. அதேபோல் வெளியில் உள்ள மக்களும் உள்ளே செல்ல முடியவில்லை. இதனால் வெளியில் இருந்தும் கூட அவர்களுக்கு உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முன்பு சென்னையில் வெள்ளம் வந்த போது, தூத்துக்குடியில் இருந்து லாரியில் வந்து மக்கள் உணவு கொடுத்தனர், இப்போது அவர்களுக்கு உணவு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
|
பத்திரிக்கையாளர்கள் கஷ்டங்கள்
மக்களின் துயரங்களை உடனுக்குடன் செய்தியாக கொடுக்கும் பத்திரிக்கையாளர்களும் அதிக சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். அவர்களும் உணவு இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இவர் ''தூத்துக்குடியில் இருக்கும் எல்லா பத்திரிக்கையாளர்களும் கிட்டத்தட்ட தண்ணீர் குடித்துதான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். மொத்த நகரமும் செயலிழந்துவிட்டது. உணவு இல்லை, இருக்கும் தண்ணீரும் குறைந்து கொண்டே வருகிறது'' என்று வருத்தப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications