வர்தா புயலால் சின்னாபின்னமான கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாம்.. உதவி செய்ய கொளத்தூர் மணி கோரிக்கை
வர்தா புயலால், உணவு, நீர், மின்சாரம் இல்லாமல் கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் தவித்துவரும் ஈழ மக்களை மீட்க வேண்டும் என்று கொளத்தூர் மணி கோரியுள்ளார்.
சென்னை: வர்தா புயல் பழவேற்காட்டில் கரையை கடந்தது. இதனால் கும்மிடிப்பூண்டி கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த இடத்தில் உள்ள அகதிகள் முகாமில் வசிக்கும் ஈழ மக்கள் உணவு, தண்ணீர், மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இவர்களை இந்தத் துயரத்தில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கோரியுள்ளார்.
கடந்த திங்கள் கிழமை வர்தா புயல் பழவேற்காட்டில் கரையை கடந்தது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கும்மிடிப்பூண்டி பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்தப் பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள அகதிகள் முகாமில் தங்கி இருக்கும் ஈழ மக்கள் உணவின்றியும், குடிக்க நீரின்றியும் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கும்மிடிப்பூண்டி ஈழத் தமிழர் முகாம் புயலால் முற்றிலுமாக அழிந்துள்ளது என்றும், முகாமில் மீட்புப் பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கொளத்தூர் மணி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், கடற்கரை எதிரே உள்ள எழிலகத்தில் மறுவாழ்வு ஆணையரை நேரில் சந்தித்து இதுகுறித்து அவர் முறையிட்டார்.
சோறின்றி இருண்ட வாழ்க்கையை வாழ்ந்து வரும் முகாம் மக்களை மீட்க இதுவரை எந்தப் பணிகளும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அம்மக்களின் வாழ்வாதாரத்தை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் மறுவாழ்வு ஆணையரை சந்தித்தனர். இந்த அமைப்பில் அங்கம் வகித்துள்ள பத்துக்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கொளத்தூர் மணியுடன் சென்று ஆணையரைச் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.