எந்த ஆட்சியிலும் நடைபெறாத கொடுமை இந்த ஆட்சியில் நடக்கிறது: திமுக ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேச்சு
சென்னை: அதிமுக ஆட்சியில் நடைபெற்றதை போன்ற கொடுமை வேறு எந்த ஆட்சியிலும் நடைபெற்றது இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரத்தில் நீதி விசாரணைக் கோரி, திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே ஆயிரக்கணக்கான திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி மாறன், அன்பழகன், முன்னாள் மேயர், மா.சுப்பிரமணியன் மற்றும் பல மாவட்ட செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள் பங்கேற்றனர்.
கண்டன கூட்டத்தில், கருணாநிதி பேசியதாவது: ஸ்டாலின் ஏற்கனவே சுட்டிக்காட்டி பேசியதை போல, ஜெயலலிதா ஆட்சி அமையும்போதெல்லாம் தமிழகத்தில், அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன. ஜெயலலிதாவும், அவரின் உடன்பிறவா சகோதரி, சசிகலாவும் சேர்ந்து, செய்த அட்டகாசங்களால், வைபவங்களால், மகாமகத்தில் பெரிய அசம்பாவிதம் நடைபெற்றது. அதை மறந்துவிட முடியாது.

செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு விவகாரத்தில் நீதி விசாரணை வேண்டும் என்று ஸ்டாலின் கூறிய கருத்தை நானும் வழிமொழிகிறேன். செம்பரம்பாக்கம் விவகாரத்தில் எந்தவித அக்கறையோடு ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுத்தனர் என்பதை அறியத்தான் இந்த மாபெரும் பேரணியை நடத்திக்கொண்டுள்ளோம்.
சென்னையில் நான் இதுவரை கண்ட பேரணியைவிட, இந்த பேரணியைத்தான் மக்கள் வரவேற்கிறார்கள். ஏனெனில், மக்கள் அந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான உயிர்சேதத்திற்கு உள்ளாகியுள்ளனர். அவர்களை காப்பாற்றும் வழியும், பொறுப்பும் இருந்தும், அந்த பொறுப்பை நிறைவேற்றாத அரசு, அண்ணா பெயரால் அமைந்துள்ள அதிமுக அரசு என்பதை நீங்கள் எல்லாம் நன்கு அறிவீர்கள்.
அப்படிப்பட்ட அரசை கண்டித்து இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த ஆட்சியினால் ஏற்பட்ட சீரழிவுகள் ஒன்றா, இரண்டா? வந்ததும் வராததுமாக, மகாமகத்தை மறக்க முடியுமா. ஆட்சிக்கு வந்தால், பொறுப்போடு, மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு, இரக்க உணர்வோடு நடந்துகொள்ள வேண்டுமேயல்லாமல், யார் எக்கேடு கெட்டால் என்ன, நாம் நம்மை காப்பாற்றி கொள்வோம் என்று ஆட்சி நடத்த இவர்கள் யார்?
தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி நடைபெற்றுள்ளது, பேரறிஞர் அண்ணா ஆட்சி நடைபெற்றுள்ளது, பக்தவச்சலம் ஆட்சி நடைபெற்றுள்ளது. ஆனால், எந்த ஆட்சியிலும், இப்படிப்பட்ட கொடுமைகளை யாரும் சந்தித்தது இல்லை.
இந்த ஆட்சியில் கொடுமைகள் நடப்பது மாத்திரமல்ல, அந்த கொடுமைகளுக்கு வக்காலத்து வாங்கி, அவற்றை நியாயப்படுத்தி, அதை தொடர்ந்து நடத்திடுவோம் என்று கூறும் மூர்க்கத்தனமான முதல்வர் உள்ளார்.
அந்த முதல்வருக்கு தலைவணங்க கூடிய ஒரு பட்டாளம் உள்ளது. அவர்கள், காலில் விழுந்து நமஸ்கரித்து, தாயே தயாபரியே என்று இன்றைக்கும் முட்டாள்தனமாக பேசிக்கொண்டுள்ளார்கள் என்றால், இது பெரியார் பிறந்த மண்ணா, பேரறிஞர் அண்ணா பிறந்த மண்ணா? நாங்கள் எல்லாம் வாழும் மண்ணா?
நாட்டில் எத்தனை கொடுமை நடைபெற்றாலும், செம்பரம்பாக்கம் போன்ற ஏரிகள் உடைப்பெடுத்தாலும் அதற்கு நாங்கள்தான் காரணம் என்று கூறிவிட்டு, மீண்டும் ஆட்சியை நடத்த முடியும் என நம்புகிறது ஒரு கூட்டம். அந்த கூட்டத்திற்கு பதில் சொல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை. வெகுவிரைவில் அந்த கூட்டத்திற்கு, சட்டரீதியாகவும், பாராளுமன்ற ஜனநாயக ரீதியாகவும் பதில் சொல்லப்படும். அந்த பதிலை சொல்லியே தீருவோம்.
குறுகிய கால அவகாசத்தில், ஆர்ப்பாட்டத்திற்கு இத்தனை பெரிய கூட்டம் கூடியுள்ளது. உங்களை பார்க்கும்போது நான் மகிழ்ச்சியடைகிறேன். கூட்டம் முடிந்ததும், வீட்டுக்குச்சென்று, கருணாநிதி கூட்டத்திற்கு சென்றோம் என்று கூறாதீர்கள். தமிழக மக்களை காக்கும் பங்கிற்காக சென்றோம் என்று கூறுங்கள். இவ்வாறு கருணாநிதி பேசினார்.












Click it and Unblock the Notifications