சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரை இருக்காது.. நாராயணசாமி அறிவிப்பால் பரபரப்பு
புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரை இடம்பெறாது என அம்மாநில முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுவை: புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரை இடம்பெறாது என அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக நாராயணசாமி உள்ளார். புதுச்சேரி அரசு நிர்வாகத்தை நடத்துவதில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவையும் இடையே அதிகாரப் போட்டி ஏற்பட்டுள்ளது.

இதனிடையே கிரண்பேடி நடத்திய வாட்ஸ்அப் குரூப்புக்கு அரசு அதிகாரி ஒருவர் ஆபாசப் படம் ஒன்றை அனுப்பிவிட, பெரும் சர்ச்சை வெடித்தது. உடனடியாக அந்த அதிகாரியைப் பணியிடை நீக்கம் செய்தார் கிரண்பேடி.
இதுபற்றிய செய்திகள் ஊடகங்களில் வெளியான நிலையில், அரசு ரகசியங்கள் வெளிநாடுகளுக்குக் கசியும் வாய்ப்புள்ளதால், அனைத்து அரசு அதிகாரிகளும் சமூக வலைதளங்களிலிருந்து வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டார் முதல்வர் நாராயணசாமி. இதையடுத்து முதல்வரின் உத்தரவை உடனடியாக ரத்துசெய்வதாக கிரண்பேடி அறிவித்தார்.
பல்வேறு விஷயங்களில் இது எதிரொலித்து வரும் நிலையில் ஆளுநர் கிரண்பேடி தரப்பும், நாராயணசாமி தரப்பும் மாறி மாறி புகார்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி சட்டசபையின் முதல் கூட்டம் வரும் 24-ம் தேதி நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை இடம் பெறுவது என்பது மரபாகும்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, புதுவை சட்டப்பேரவை கூட்டத்தின் முதல் நாள் ஆளுநர் உரை இருக்காது. அவரும் பேசுவதற்கு கேட்டுள்ளார். இதுதொடர்பாக சட்ட வல்லூர்களுடன் ஆராய்ந்து வாய்ப்பு இருந்தால் கொடுக்கப்படும் என்றார் நாராயணசாமி.












Click it and Unblock the Notifications