கொடநாடு எஸ்டேட் பங்களாவில் வருமான வரி சோதனைன்னு சொன்னது வதந்தியாமே?!- வீடியோ
கொடநாடு எஸ்டேட் பங்களாவில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர் என வெளியான தகவலிலுண்மை இல்லை எனக் கூறப்படுகிறது.
கோத்தகிரி: ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் வெளியானதில் உண்மை இல்லை எனக் கூறப்படுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கட்ந்த சில நாட்களுக்கு முன்பு அங்கிருந்த காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டார். காவலாளி கிருஷ்ண பகதூர் படுகாயமடைந்தார்.
இந்நிலையில் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் தொடர்புடைய 11 பேரை கைது செய்துள்ளதாக நீலகிரி காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா கூறியுள்ள்ளார். இந்த கொலைக்குப் பிறகு கொடநாட்டில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், இன்று சில மத்திய, மாநில அதிகாரிகள் கொடநாட்டு பங்களாவைப் பார்க்க ஜீப்பில் சென்றுள்ளனர். அதற்குள் அங்கு வருமான வரி சோதனை நடத்த அதிகாரிகள் வந்துள்ளனர் என செய்தி பரவியுள்ளது.
இந்தச் செய்தியால் குழப்பமடைந்த போலீசார் கொடநாடு சென்று விசாரிப்பதா? கூடாதா என தயங்கி உள்ளனர். பிறகு அங்கு சென்று விசாரித்ததில் நீலகிரிக்கு சுற்றுலா வந்த மத்திய ,மாநில அதிகாரிகள் கொடநாடு பங்களாவையும் பார்க்க விரும்பியுள்ளனர். ஆனால் அதற்கு அங்கிருந்த காவலாளி மறுக்கவே அவர்கள் திரும்பிவிட்டனர் என போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
ஆக மொத்தத்தில், இன்னும் கொஞ்ச நாட்களுக்கு கொடநாடு பங்களா என்றாலே பதற்றமும் பதபதைப்புமே மிஞ்சும்போல!