கூட்டணியே இனி கிடையாது.. பெரிய கும்பிடு போட்ட விஜயகாந்த்!
உள்ளாட்சி தேர்தலில் யாருடனும் கூட்டணி கிடையாது. கூட்டணிக்கு ஒரு கும்பிடு என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
சென்னை: உள்ளாட்சி தேர்தல் அறிவிக்காமல் கூட்டணி பற்றி இப்போதைக்கு கூற முடியாது என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கூறியுள்ளார். கூட்டணிக்கு ஒரு கும்பிடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், புதிய ஆளுநர் எப்படி செயல்படுகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றார்.
தமிழகத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஆளுநரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் கடிதம் கொடுத்ததாகவும் அவர் கூறினார். மழைக்காலத்தில் வெள்ளத்தை எதிர்கொள்ள அரசு தயாராக இல்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
இடைத்தேர்தலில் யாருடன் கூட்டணி என்று கேட்டதற்கு பதிலளித்த விஜயகாந்த், கூட்டணிக்கு ஒரு கும்பிடு... இனி தனியாகவே போட்டியிடுவேன் என்றார்.
தேர்தல் வரும் முன்பாகவே கூட்டணி பற்றி கூற முடியாது. நீங்க எந்த பத்திரிக்கைன்னு சொல்லுங்க நான் பதில் சொல்றேன் என்றார்.
பிறந்தநாள் விழாக்களில் அரசியல் பேசப்படுகிறதே என்று கேட்டதற்கு, எம்ஜிஆர் எனக்கு பிடித்த தலைவர். அவருக்காக விழா எடுப்பது நல்லதுதான், அதற்காக பள்ளி மாணவர்களை கஷ்டப்படுத்தக்கூடாது என்று கூறினார்.
தமிழகத்தில் அரசு சரியாக செயல்படவில்லை. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிக்கை விடுபவர்கள் காய்ச்சலை கட்டுப்படுத்தி விட்டார்களா என்று கேட்டார்.