அதிமுக ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி
அதிமுக ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
Recommended Video
சேலம் : அதிமுக ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
சேலம் மாவட்டத்தில் நேற்று அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது அதிமுக ஆட்சியை யாராலும் அழிக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகள் மற்றும் அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
அதில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் வரவிருக்கும் நிலையில் அதற்கான வெற்றிக்கு கட்சியினர் என்ன செய்ய வேண்டும், எப்படி செயலாற்ற வேண்டும் என்பது குறித்து அவர் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்தார்.
கர்நாடக அரசிடம் கோரிக்கை
இதுகுறித்து செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: காவிரி பிரச்சினையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுத்தார். அதில் இன்னும் நான்கு வாரத்தில் சுப்ரீம் கோர்ட் மூலம் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். கர்நாடக அரசிடம் 7 டி.எம்.சி தண்ணீரை உடனே திறந்து விட வற்புறுத்தப்பட்டு உள்ளது.
ஆர்.கே நகர் இடைத்தேர்தல்
கர்நாடக சட்டசபை தேர்தல் அறிவித்த பிறகு அங்கு போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே கட்சியை விட்டு நீக்கப்பட்டவர் தினகரன். அவர் கூறும் கருத்துக்கு எல்லாம் எங்களால் பதில் சொல்ல முடியாது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் எப்படி வெற்றி பெற்றார் என்பது அனைவருக்கும் தெரியும். எப்போதும் அவரால் அதே பாணியில் வெற்றி பெற முடியாது.
தொண்டர்கள் பலம்
அ.தி.மு.க.வின் அடிப்படை அமைப்பு முழுவதும் எங்கள் பக்கமே உள்ளது. தொண்டர்களும் எங்களுடன் தான் உள்ளனர். அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் சிறப்பாக வழி நடத்தி செல்வோம். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்சி, ஆட்சி இருக்காது என பலர் நினைத்தனர். அதை வென்று காட்டி இயக்கம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.
அதிமுக ஆட்சி கவிழ்க்க முடியாது
மேலும் சிலர் பல்வேறு சூழ்ச்சிகள் செய்து அ.தி.மு.கவை அழித்து விடாலம் என்றும், ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்றும் நினைத்தனர். ஆனால் அவர்கள் நினைத்தது ஒரு போதும் நடக்காது. அதிமுக ஆட்சியை யாராலும் அழிக்க முடியாது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.