சிவன் சொன்னான்.. நான் பிச்சை எடுக்கிறேன்.. பேட்டிக்கே பணம் வாங்கிய பலே ரஷ்ய இளைஞர்!
சிவபெருமானே சொன்னதால் தான் பிச்சை எடுப்பதாகவும் அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் ரஷ்ய இளைஞர் இவாஞ்சலின் பெர்ன்கோவ் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: சிவபெருமான் உத்தரவிட்டதால் தான் பிச்சை எடுப்பதாகவும் அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் சென்னையிலும் பிச்சை எடுத்த போது பிடிபட்ட ரஷ்ய இளைஞர் இவாஞ்சலின் பெர்ன்கோவ் தெரிவித்துள்ளார்.
ஏடிஎம்கார்டு முடங்கியதால் பணம் எடுக்க முடியாமல் போனதாக காஞ்சிபுரத்திற்கு சற்றுலா வந்த ரஷ்ய இளைஞர் இவாஞ்சலின் பெர்ன்கோவ் குமரக்கோட்டம் முருகன் கோவில் வாசலில் அமர்ந்து பிச்சை எடுத்தார். இந்த தகவல் அறிந்ததும் சிவகாஞ்சி உதவி ஆய்வாளர் துளசி அவரிடம் விசாரணை நடத்தி ரூ. 500 பணம் கொடுத்து சென்னையில் உள்ள ரஷ்ய தூதரகத்துக்கு அனுப்பி வைத்தார்.
ரஷ்ய இளைஞர் பிச்சை எடுத்த சம்பவத்தை சமூக வலைதளத்தில் பார்த்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இவாஞ்சலின் ரஷ்யா செல்ல அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றார். இந்நிலையில் நேற்று தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் அமர்ந்து இவாஞ்சலின் பிச்சை எடுத்துள்ளார். நண்பரை பார்ப்பதற்காக காத்திருந்த போது அவர் பிச்சை எடுத்துள்ளார்.

பிடிபட்ட இளைஞர்
இதனையடுத்து போலீஸ் அதிகாரிகள் இவாஞ்சலினை பிடித்து விசாரணை நடத்தினர். அவரிடம் சுற்றுலா வந்ததற்கான ஆவணங்கள் இருக்கிறதா என்றும் போலீசார் சரிபார்த்துள்ளனர். அவருக்கு அடுத்த மாதம் 11ம் தேதி வரை விசா உள்ளது.

இந்தியா பிடித்திருக்கிறது
இதனிடையே பிச்சை எடுப்பது குறித்து சுவாரஸ்யமான தகவலை இவாஞ்சலின் கூறியுள்ளார். நான் இந்தியா வரும் போது இந்திய மதிப்பில் ரூ. 4000 மட்டுமே என்னிடம் இருந்தது. இந்தியா எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இங்கு பிச்சை எடுத்தால் அனைவரும் பணம் கொடுக்கின்றனர்.

தடுக்க முடியாது
சிவபெருமான் உத்தரவிட்டதால் தான் நான் பிச்சை எடுத்தேன். நான் பிச்சை எடுப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இதில் புது டெக்னிக்கையும் வைத்துள்ளார்.

பேட்டிக்கும் பணம்
தன்னுடன் செல்ஃபி எடுக்க விரும்புபவர்கள் ரூ. 10 தர வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறாராம். மக்களும் அவருக்கு பணம் கொடுத்து செல்ஃபி எடுத்துச் சென்றுள்ளனர். இதே போன்று தொலைக்காட்சி ஊடகங்கள் பேட்டி எடுக்க சென்ற போது காசு கொடுத்தால் தான் பேட்டி என்று சொல்லி காசு வாங்கிக் கொண்டு பேட்டி கொடுத்துள்ளாராம் இவாஞ்சலின்.

என்ன செய்யப் போகிறார்?
இவாஞ்சலின் உதவி கேட்டால் மட்டுமே அவருக்கு உதவி செய்ய முடியும் என்று ரஷ்ய நாட்டு தூதரகம் கூறி விட்டது. இந்நிலையில் விசா முடியும் இவாஞ்சலின் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பது தெரியாமல் அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications