பலாத்கார வழக்கில் இரக்கம் காட்டமுடியாது- 10 ஆண்டு தண்டனையை உறுதி செய்தார் நீதிபதி தேவதாஸ்!
சென்னை: சிறுமியை பலாத்காரம் செய்தவனுக்கு கீழ்நீதிமன்றம் வழங்கிய 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையை உறுதிசெய்து இத்தகைய குற்றவாளிக்கெல்லாம் இரக்கம் காட்டமுடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.தேவதாஸ் அதிரடி தீர்ப்பளித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இதேபோன்ற பலாத்கார வழக்கில் சமரச தீர்வுக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உத்தரவு பிறப்பித்திருந்தார் நீதிபதி தேவதாஸ்.
பலாத்கார வழக்கு ஒன்றின் அப்பீலில் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி தேவதாஸ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிறப்பித்த உத்தரவு பெரும் சர்ச்சையாக வெடித்தது. கடலூர் சிறுமி பலாத்கார வழக்கில் 2008 ஆம் ஆண்டு மோகன் என்பவனுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் மனுவை விசாரித்த நீதிபதி தேவதாஸ், சமரச தீர்வுக்கான மையத்தை அணுகுமாறும், பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றவாளி திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இத்தகைய தீர்ப்புக்கு பெண்கள் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் இதே நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் மற்றொரு பலாத்கார வழக்கின் அப்பீல் மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
மற்றொரு வழக்கு....
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் பி.செந்தில்குமார் என்பவன் 5 வயது சிறுமியை மிட்டாய் கொடுத்து பலாத்காரம் செய்தான் என்பது வழக்கு. இந்த வழக்கில் செந்தில்குமாருக்கு கீழ் நீதிமன்றம் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த 10 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில்குமார் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி பி.தேவதாஸ் விசாரித்து பிறப்பித்துள்ள தீர்ப்பு:
இந்த வழக்கில் செந்தில்குமார் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவேதான் அவருக்கு கீழ்நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
இரக்கமே காட்ட முடியாது...
மனுதாரர் செந்தில்குமார், 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இப்போதெல்லாம் பெண்கள், குழந்தைகள் ஆண்களின் இச்சைக்கு இலக்காகி வருகின்றனர். இது மிருகத்தனமான செயலாகும். இதுபோன்ற குற்றச்செயல்களுக்கு இரக்கம் காட்டமுடியாது.
பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடும் கழுகுகளை எளிதாக தப்பிவிட அனுமதிக்கக்கூடாது. பலாத்கார சம்பவத்துக்கு உள்ளான பெண், அந்த சம்பவத்தை தன் நினைவில் இருந்து நீக்குவதற்கு நீண்ட காலம் தேவைப்படும். அந்த பெண்ணுக்கு உளவியல் ரீதியான பாதிப்பு ஏற்பட்டு, உடலாலும், மனதாலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்.
அந்த கொடூர சம்பவம் நினைவில் இருந்து விலகிச் செல்லாது. கொலை செய்யப்படுபவர்கள் கூட ஒரு முறைதான் சாவார்கள். ஆனால் பாலியல் கொடுமைக்கு உள்ளாகும் பெண்கள், அந்த சம்பவத்தின் நினைவால் தினந்தோறும் இறக்கின்றனர். இதனால் மனுதாரருக்கு கீழ்நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்கிறேன். வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.
இவ்வாறு நீதிபதி பி. தேவதாஸ் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications