என்னையும், என் தம்பி ஸ்டாலினையும் யாராலும் பிரிக்க முடியாது: அழகிரி திடீர் பல்டி
தேனி: கொள்கையால் மட்டுமே பிரிந்துள்ளோமே தவிர என் சகோதரர் மு.க. ஸ்டாலினுடனான உறவை யாராலும் பிரிக்க முடியாது என்று மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள மு.க. அழகிரி வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மு.க. ஸ்டாலின் என் சகோதரர். நாங்கள் கொள்கையால் மட்டுமே பிரிந்திருக்கிறோமே தவிர எங்களின் உறவை யாராலும் பிரிக்க முடியாது. கருணாநிதி இல்லை எனில் திமுகவே இல்லை. மேலும் புதிய கட்சி துவங்கும் எண்ணம் எல்லாம் எனக்கு இல்லை என்றார்.
நிகழ்ச்சியின்போது காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எம். ஆரூண் மற்றும் மதிமுக வேட்பாளர் அழகு சுந்தரம் ஆகியோர் அழகிரியை சந்தித்து ஆதரவு கோரினார்கள்.
நேற்று முன்தினம் ராமநாதபுரம் சென்ற அழகிரி மு.க. ஸ்டாலின் தன்னை கட்சியில் இருந்து நீக்கக் கோரி கருணாநிதியை கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும், அதனால் தான் அவர் தன்னை கட்சியில் இருந்து நீக்கியதாகவும் புகார் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று தனக்கு ஸ்டாலினுடனான உறவை யாராலும் பிரிக்க முடியாது என்று அழகிரி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.