மகளிர் உரிமைத்தொகை.. 1 ரூபாய் நிதியைக் கூட தவறாக பயன்படுத்தவில்லை.. சபாநாயகர் அப்பாவு விளக்கம்!
தென்காசி: எந்த நிதியும் தவறாக இதுவரை பயன்படுத்தப்படவில்லை என்றும், மத்திய அரசு வழங்கும் நிதியில் 1 ரூபாய் கூட வீணாக செலவழிக்கப்படவில்லை என்றும் சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்.
திமுக அரசின் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தை செயல்படுத்த ஆதிதிராவிடர் நலத்துறைக்கான நிதியை பயன்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இதுதொடர்பாக கேள்வி எழுப்பி இருந்தனர். இதையடுத்து இந்த குற்றச்சாட்டு தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்தது.

'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.7,000 கோடியில், பட்டியல் இனத்தவருக்காக ரூ.1,540 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகையை பட்டியல் இனத்தவருக்கு மட்டும் தான் செலவிட இயலும். எனவே ஆதிதிராவிடர் துணைத் திட்டத்தின் நிதி பிற திட்டங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்கு புறம்பானது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே கட்டுமான மற்றும் மனை தொழில் கூட்டமைப்பு சார்பாக பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை ஆற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, "எந்த நிதியும் தவறாக இதுவரை பயன்படுத்தப்படவில்லை. அவ்வாறு ஏதாவது புள்ளி விவரம் இருந்தால் அதை யார் வேண்டுமானாலும் தெரிவிக்கலாம். அதற்கு அமைச்சர்கள் தகுந்த விளக்கம் அளிப்பார்கள்" எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய சபாநாயகர் அப்பாவு, "ஜிஎஸ்டி ஒப்பந்தப்படி தமிழ்நாட்டில் இருந்து ஒரு ரூபாய் வரியாக செலுத்தினால் நமக்கு 17 பைசா மட்டுமே திரும்பக் கிடைக்கிறது. ஆனால் உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்கள் 1 ரூபாய் செலுத்தினால் 2 ரூபாய் திரும்பக் கிடைக்கிறது. ஏன் இந்த பாரபட்சம்? மற்ற மாநிலங்களுக்கு வழங்க நமது பணம் செலவாகி இருக்கிறது.

நம் நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து 65 ஆண்டுகளில் மத்திய அரசு வாங்கிய கடன் மொத்தம் 55 லட்சம் கோடி. ஆனால் 2014 முதல் தற்போது வரை ஒன்பது ஆண்டுகளில் மட்டும் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு கடனாக பெற்றுள்ளது. அதே சமயம் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 16 லட்சத்து 15 ஆயிரம் கோடி கடன் ரைட் ஆப் செய்யப்பட்டு இருக்கிறது. இது ரிசர்வ் பேங்க் ஆளுநர் வெளியிட்ட தகவல்.
நிதி விஷயத்தை பொறுத்தவரை மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு பாரபட்சம் காட்டுகிறது. மத்திய அரசு கொடுக்கும் நிதியில் ஒரு ரூபாயை கூட தமிழ்நாடு அரசு வீணாக செலவு செய்யவில்லை. சமீபத்தில் கூட தமிழ்நாடு அரசு ஒரு நிறுவனத்துடன் தொழில் தொடங்குவதற்காக ரூ.1,600 கோடி ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications