சின்னம் முடக்கியதற்கு அண்ணாமலை காரணமா? பாஜகவின் புதிய எதிரி சீமான்!
பாஜக எதிர்ப்பு அதிக வேகம் காட்டியது திமுகதான். அதற்கு அடுத்து அந்தப் புயல் அப்படியே திசை மாறி அதிமுக பக்கம் சென்றது. அதன்பிறகு அதிமுக Vs பாஜக என்று மோதல் உருவானது.
இப்படி தமிழ்நாட்டில் பாஜக ஒரே நேரத்தில் இரண்டு பெயர் கட்சிகளையும் எதிரியாக்கிக் கொண்டது. அதற்குக் காரணம் அண்ணாமலைதான் என்பது அதிமுகவின் குற்றச்சாட்டு.

அண்ணாமலை தொடர்ந்து ஜெயலலிதாவையும் அண்ணாவையும் விமர்சித்துவந்ததால், இந்த மோதல் முதலில் உருவெடுத்தது. இப்போது அது பாஜக Vs அதிமுக என்ற நிலையை எட்டியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நேரடியாக பாஜகவையே விமர்சிக்கத் தொடங்கி உள்ளனர்.
இதனிடையே தமிழ் நாட்டில் பாஜகவுக்கு மூன்றாவது எதிரி ஒருவர் உருவாகி இருக்கிறார். சீமானின் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் முடக்கியதற்குப் பின்னால், பாஜக உள்ளதாகக் குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். மிகக்கடுமையாக பாஜகவின் தாமரை சின்னத்தை முடக்க வேண்டும் என்ற அளவில் காட்டமாகப் பேசி வருகிறார் சீமான்.
"நாங்கள் எளிய பிள்ளைகள் போராடி உண்டியல் குலுக்கி, பிச்சை எடுத்து, சுவரொட்டி ஒட்டி சின்னத்தைக் கொண்டு போய் மக்களிடம் சேர்க்கும்போது தூக்கு சின்னத்தை வேறு ஒருவரிடம் கொடுக்கிறார்கள். இந்த விவசாயி சின்னத்தை வாங்கி உள்ளவர் போட்டியிடமாட்டார்.

அப்படியே போட்டியிட்டால் கூட 100 ஓட்டுக்கு மேல் போகமாட்டார். அப்படி இருக்கும்போது சின்னத்தை ஏன் கொடுத்தார்கள்? என்னைச் சிதைக்க வேண்டும். என் வாக்கு விழுக்காட்டைக் குறைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதைச் செய்திருக்கிறார்கள்.
இதற்கும் தமிழக பாஜகவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையா? இங்கு உள்ளவர்களுக்குத் தெரியாதா? கர்நாடகாவில் உள்ள இவர்களின் தலைவர் பி.எல். சந்தோஷுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையா?
ஏன் மகாராஷ்டிராவில் சின்னத்தைக் கொடுக்கவில்லை? குஜராத்தில் ஒருவருக்கும் கொடுக்கவில்லை? அரை கி.மீட்டரில் உள்ள கர்நாடகாவுக்குக் கொடுத்தது ஏன்? அங்கே கட்சியே இல்லை? அந்த கட்சிக்காரருக்கு ஏன் கொடுக்க வேண்டும்? சின்னத்தைவிடு! நியாயத்தைப் பேசு.

இன்னும் தேர்தல் தேதியே அறிவிக்கவில்லை, அதற்குள் ஏன் சின்னத்தை ஒதுக்கினார்கள்? வரி கட்ட வேண்டும் என்று விதிமுறை உள்ளது. நாங்கள் 3 தேர்தலிலும் வரி கணக்குத் தாக்கல் செய்துள்ளோம்.
விவசாயி சின்னம் கொடுக்கப்பட்டுள்ள கட்சிக்காரர் வரி கணக்குத் தாக்கல் செய்துள்ளாரா? பொதுக்குழு கூட்டி இருக்கிறாரா? சட்டவிதிகளின்படி நடந்துள்ளாரா?
இது மிகப்பெரிய அநீதி? உடனே சின்னத்தைக் கூட காப்பாற்ற முடியவில்லை. இவர் எப்படி கட்சி நடத்துவார் என என்னென்னவோ எழுதுகிறீர்கள், பேசுகிறீர்கள். இதற்குப் பின்னால் உள்ள அரசியல் தெரியுமா உங்களுக்கு? முதலில் பாஜகவின் தாமரை சின்னத்தை ஒழிக்க வேண்டும்.

இந்தத் தேர்தல் முடிந்ததும் வழக்குப் போடுவேன். தேர்தல் ஆணையம் பதில் சொல்லவேண்டும். பள்ளியில் தேசிய ,மலர் தாமரை என்று சொல்லிக் கொடுக்கிறார்கள்.
அப்படி ஒரு தேசிய மலரை எப்படி ஒரு கட்சிக்குச் சின்னமாகக் கொடுத்தார்கள்? நான் மயில் சின்னம் கேட்டபோது அது தேசியப் பறவை என்று கொடுக்க மறுத்தார்களே? அப்படி என்றால் தேசிய மலரை எப்படிக் கொடுத்தார்கள்?
தேசிய சின்னமாகத் தாமரையை வைத்தால் பாஜகவின் சின்னத்தை நீக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், தேசிய மலரை மாற்ற வேண்டும்" என்கிறார்

சீமானின் குற்றச்சாட்டுக்கு உடனடியாக பதிலடி கொடுத்துள்ளார் அண்ணாமலை. அவர் கட்சிக்கு எப்படி சின்னம் வாங்குவது என்றே தெரியாமல் என் மீது பழி போடுகிறார் என்று விளக்கம் அளித்துள்ளார்.
அவர் பேசும் போது "அண்ணாமலைக்கும் நாம் தமிழர் கட்சிக்கு முன்பு ஒதுக்கப்பட்ட சின்னம் கிடைக்காததற்கு என்ன சம்பந்தம்? இவர் முதலில் விண்ணப்பித்திருந்தால், இவருக்கு அந்தச் சின்னம் கிடைத்திருக்கும்? யார் முதலில் விண்ணப்பிக்கிறார்களோ அவருக்குத்தான் முதலில் சின்னம் ஒதுக்கப்படும்.
உடனே டெல்லி உச்சநீதிமன்றத்திற்குச் சின்னம் கேட்டு சீமான் சென்றார். அங்குள்ள நீதிபதி, 'தேர்தல் ஆணையம் செய்தது சரிதான். நடைமுறை படி பார்த்தால் நாம் தமிழர் கட்சி விண்ணப்பிக்கவில்லை.

கேட்டால், மறந்துவிட்டதாகச் சொல்கிறீர்கள்? இன்னொரு கட்சி அந்தச் சின்னத்தைக் கேட்டுள்ளது. அதற்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். முதல் விண்ணப்பதாரர் அவர்தான் என்பதால் அவருக்குச் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.
இத்தனை ஆண்டு காலமாகத் தேர்தலில் போட்டியிடும் நீங்கள், ஏன் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறவில்லை? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இதில் சம்பந்தமே இல்லாமல் சீமான் என் மீது பழியைப் போடுகிறார். ஒரு கட்சியின் தலைவர் அவரது கட்சிக்குச் சின்னம் கேட்டு விண்ணப்பிக்கவில்லை. அது அவர் தவறா? என் தவறா?
அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்றால் என்னவென்று அவருக்குத் தெரியுமா? ஒரு சின்னத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியுமா? இது எதுவுமே தெரியாமல் அவர் என் மீது பழிபோடுவது என்ன வகையில் நியாயம்?" என்று கேள்வி எழுப்பி உள்ளார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications