எச். ராஜா பல்டி வாக்குமூலத்தின் உண்மைத் தன்மை அறியப்படும்... ஓ.பன்னீர்செல்வம் உறுதி!
பெரியார் குறித்து எச். ராஜா கூறிய கருத்துகள் மிகவும் கண்டனத்திற்குரியது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: பெரியார் குறித்து எச். ராஜா கூறிய கருத்துகள் மிகவும் கண்டனத்திற்குரியது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். முகநூலில் அந்த கருத்தை தான் பதிவிடவில்லை என்று எச். ராஜா பல்டி அடித்துள்ளார் அதன் உண்மைத் தன்மை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்டத்திற்கு பிறகு முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
பெரியார் குறித்து பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கூறிய கருத்துகள் கண்டனத்திற்குரியவை. அவருடைய உதவியாளர் தான் பதிவு செய்தார் என்று எச். ராஜா கூறும் கருத்தும் அபத்தமாக உள்ளது.
எச். ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும்
தனது தவறுக்கு எச். ராஜா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். திராவிட இயக்கத்தின் தலைக்காவிரியாக இருப்பவர் தந்தை பெரியார். அவர் விதித்த பகுத்தறிவு கொள்கைகளால் தான் இன்று சாதாரண மனிதன் கூட முதல்வராக, பொதுவாழ்வில் ஏற்றம் பெறுபவர்களாக இருக்க முடிகிறது.
பெரியார் பற்றிய கருத்தை ஏற்க முடியாது
தமிழக மக்களுக்கான சமுதாய புரட்சியை ஏற்படுத்தியவர் பெரியார். அவரைப் பற்றி எச். ராஜா கூறிய கருத்துகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை.
எச்.ராஜா பல்டி விசாரிக்கப்படும்
vஎச். ராஜா தானே பல்டி அடித்து தான் அந்தப் பதிவை போடவில்லை என்று கூறி இருக்கிறார். அதன் உண்மைத்தன்மை என்ன என்பது கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
பெரியார் தமிழ்ச்சமுதாயம் வளர்த்தவர்
துணிச்சலான கருத்துகளை சொல்லக்கூடியவர் தந்தை பெரியார். தமிழ்ச்சமுதாயம் வளர்வதற்காகவே தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் தந்தை பெரியார் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.