ஜெ. மரணத்திற்கு நீதி கேட்டு.. காஞ்சியில் சுற்றுப்பயணத்தை தொடங்கினார் ஓ.பி.எஸ்.
ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை கேட்டு இன்று காஞ்சிபுரத்தில் இருந்து சுற்றுப்பயணத்தை ஓபிஎஸ் தொடங்கியுள்ளார்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காஞ்சிபுரத்தில் தனது சுற்றுப்பயணத்தை துவக்கினார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்கிறார்.
அதிமுகவில் பிளவுபட்டுள்ள இரு அணிகளும் இணைந்து விடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இதற்காக இரு தரப்பிலும் பேச்சுவாரத்தை குழுக்கள் எல்லாம் அமைக்கப்பட்டன. ஆனால் பேச்சுவார்த்தை தொடங்குவதில் தொடர்ந்து முட்டுக்கட்டை ஏற்பட்டு வந்தது.
மேலும், இரு அணியினரும் மாறுபட்ட கருத்துக்களை கூறி வருவதால் பேச்சுவார்த்தைக்கு இணக்கமான சூழலும் உருவாகவில்லை. ஓபிஎஸ் அணி விதிக்கும் நிபந்தனையை ஏற்க பழனிசாமி அணியினர் தயாராக இல்லை. அதே நேரத்தில் நிபந்தனை எதுவும் இன்றி பேச தயாராக இல்லை என்று ஓபிஎஸ் அணியினர் கூறி விட்டனர்.
இதுபோன்று இரு அணியினரும் மாறி மாறி பேசி வருவதால் பேச்சுவார்த்தைக்கு இழுபறி நீடித்து வரும் நிலையில், ஓ.பி.எஸ். தனது சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். முதல்கட்டமாக காஞ்சிபுரம் ஓ.எம்.ஆர் சாலை ஒய்.எம்.சி மைதானத்தில் நடைபெற்று வரும் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டுள்ளார். இந்தக் கூட்டத்தில் மதுசூதனன் எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கே.பிமுனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வத்தின் காஞ்சி கூட்டத்தை மிஞ்சும் அளவிற்கு மக்களின் கவனத்தை தங்களது பக்கம் ஈர்க்க மதுரையில் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு.