அரசு பங்களாவை காலி செய்ய ஓபிஎஸ்-க்கு எடப்பாடி டிபார்ட்மெண்ட் நோட்டீஸ்
அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என "மக்களின் முதல்வர்" ஓ. பன்னீர்செல்வத்துக்கு பொதுப்பணித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டை காலி செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு பொதுப்பணித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முதல்வர் பதவியில் இருந்து கடந்த 5-ந் தேதி ஓ. பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். இதையடுத்து அவரை காபந்து அரசின் முதல்வராக இருக்குமாறு பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் கேட்டுக் கொண்டார்.
இதனால் கடந்த 10 நாட்களாக இடைக்கால முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் இருந்தார். அத்துடன் சட்டசபையில் தமக்கு பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க தர வேண்டும் எனவும் ஆளுநரிடம் கோரிக்கையும் விடுத்து வந்தார்.

ஓபிஎஸ்க்கு பின்னடைவு
ஆனால் ஆளுநர் வித்யாசாகர் ராவ் இதை நிராகரித்துவிட்டு முதல்வராக எடப்பாடி பழனிச்சாமிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இது ஓ. பன்னீர்செல்வத்துக்கு பெரும் பின்னடைவாகும்.

தலைமையகமாக..
கடந்த 7-ந் தேதி அதிமுகவின் நியமன பொதுச்செயலர் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார் ஓ. பன்னீர்செல்வம். அது முதல் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ. பன்னீர்செல்வம் இல்லம்தான் அந்த அணியின் தலைமையகமாக இருந்து வருகிறது.

தாக்குதல்
இதனிடையே நேற்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்ற சிறிது நேரத்தில் ஓ. பன்னீர்செல்வம் வீட்டில் குவிந்திருந்த ஆதரவாளர்கள் மீது சசிகலா கோஷ்டியினர் கல்வீசித் தாக்கினர். இதனால் அப்பகுதியே பெரும் பதற்றமானது.

நோட்டீஸ்
இந்த நிலையில் அரசு இல்லத்தை ஓ. பன்னீர்செல்வம் காலி செய்ய வேண்டும் என பொதுப்பணித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வசம்தான் பொதுப்பணித்துறை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications