குடியரசு தினத்தில் தேசிய கொடியேற்றிய முதலாவது முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
குடியரசு தினத்தில் தேசிய கொடியேற்றிய முதலாவது முதல்வர் என்ற பெருமையை ஓ. பன்னீர்செல்வம் பெற்றுள்ளார்.
சென்னை: நாட்டிலேயே குடியரசு தினத்தில் தேசிய கொடியேற்றிய முதலாவது முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
நாடு விடுதலை அடைந்தது முதல் சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் மாநிலங்களின் ஆளுநர்கள் கொடியேற்றுவது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் 1974-ம் ஆண்டு சுதந்திர தின நாளில் மாநில முதல்வர்களும், குடியரசு தின நாளில் ஆளுநர்களும் கொடியேற்றும் நடைமுறை உருவானது.
இந்த நடைமுறை உருவாக காரணமாக இருந்தவர் திமுக தலைவர் கருணாநிதி. தற்போது தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருக்கும் வித்யாசகர் ராவ், மகாராஷ்டிரா மாநில குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்று தேசிய கொடியேற்றினார்.
இதனால் சென்னை மெரினா கடற்கரையில் இன்று நடைபெற்ற 68-வது குடியரசு தின விழாவில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்று தேசியக் கொடியேற்றி வைத்தார். நாட்டிலேயே குடியரசு தினத்தில் ஆளுநர் அல்லாமல் தேசிய கொடியேற்றிய முதலாவது முதல்வர் என்ற பெருமையை ஓ. பன்னீர்செல்வம் பெற்றுள்ளார்.