சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் தொகுதிகளில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் இன்று பேரணி
அதிமுக எம்எல்ஏக்கள் நியாயமான முடிவுகளை எடுக்க வலியுறுத்தும் வகையில், அவர்கள் சார்ந்திருக்கும் தொகுதிகளில் வெள்ளிக்கிழமை பேரணி, ஊர்வலம் நடைபெறும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னை: சசிகலா ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் தொகுதிகளில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் விழிப்புணர்வு பிரசாரத்தை இன்று ஆரம்பிக்கிறார்கள்.
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு நேற்று இரவு 7.45 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் இ.மதுசூதனன், கே.பி.முனுசாமி, முன்னாள் பேரவைத் தலைவர் பி.எச்.பாண்டியன் உள்ளிட்டோர் சென்றனர்.

நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி தலைமையில் பதவியேற்றிருக்கும் ஆட்சி ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசத்துடன் கூடிய ஆட்சியாக இல்லை. சசிகலா குடும்பத்தினுடைய ஆட்சிதான் பதவியேற்றுள்ளது. இந்த ஆட்சியை நீக்கி, மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை நிறுவுவோம். இந்தச் சபதத்தைக் கூடிய விரைவில் நிறைவேற்றுவோம்.
அதிமுக எம்எல்ஏக்கள் நியாயமான முடிவுகளை எடுக்க வலியுறுத்தும் வகையில், அவர்கள் சார்ந்திருக்கும் தொகுதிகளில் பேரணி, ஊர்வலம் நடைபெறும். ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் அவர் வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டு கட்சி நடத்தும் துர்பாக்கிய சூழலை அகற்ற வேண்டும். தமிழகத்தில் ஏழரை கோடி மக்களும், அதிமுக தொண்டர்களும் விரும்பாத, விரோத ஆட்சி தூக்கி எறியப்படும். அதுவரை ஓயமாட்டோம் என்றார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடைபெற உள்ள நிலையில், இன்று அதிமுகவின் சசிகலா தரப்பு ஆதரவு எம்.எல்.ஏக்கள் தொகுதிகளில் பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்ட உள்ளார் ஓ.பன்னீர்செல்வம். எல்லா தொகுதிகளுக்கும் அவர் மட்டுமே செல்ல முடியாது என்பதால் அவர் அணியிலுள்ள சீனியர்களும் பயணம் செல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications