ஜெயலலிதா நல்லா இருக்காங்க.. அவங்களுக்கு திருஷ்டி பட்டுருச்சு... 'கன்னடத்து பைங்கிளி' சரோஜாதேவி
ஜெயலலிதாவின் சமகால நடிகையான சரோஜா தேவி சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரித்தார்.
சென்னை: ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரிக்க பழம்பெரும் நடிகையான சரோஜா தேவி இன்று அப்போலோ மருத்துவமனை சென்றார். அங்கு அதிமுக தலைவர்களிடம், அமெரிக்க மருத்துவரிடமும் ஜெயலலிதாவின் உடல் நிலை விசாரித்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி முதல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் நுரையீரல் தொற்று நோய் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயலலிதாவை நேரில் பார்க்க முடியவில்லை என்றாலும், பல்வேறு கட்சித் தலைவர்களும், அவருடன் சமகாலத்தில் நடித்த நடிகை மற்றும் நடிகர்களும் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று அதிமுக தலைவர்கள், அமைச்சர்கள், மருத்துவர்களை சந்தித்து ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று கர்நாடகத்தில் இருந்து ஜெயலலிதாவின் சமகால நடிகையான சரோஜா தேவி அப்போலோவிற்கு சென்றார். அங்கு அதிமுக தலைவர்கள், மருத்துவர்களிடம் முதல்வரின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். பின்னர், வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அமெரிக்க டாக்டரிடம் பேசினேன். அவர், முதல்வரின் உடல் நிலை நன்றாக இருப்பதாக கூறியுள்ளார். ஜெயலலிதா நன்றாக இருக்கிறார்கள். அவருக்கு திருஷ்டிப்பட்டுவிட்டது. இது அவருக்கு ஒரு திருஷ்டிப் பரிகாரம்தான். அது போய்விடும். அதனால் சீக்கிரம் குணம் அடைந்து அவர்கள் வீட்டிற்கு சென்றுவிடுவார்கள். ஒரு சோதனை மாதிரி இது அவர்களுக்கு வந்திருக்கிறது. சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்.

அவர் ஒரு சாதனைப் பெண். அவர் மாதிரி ஒரு பெண் இருப்பதை நினைத்து நாம் பெருமை பட வேண்டும். ஜெயலலிதா நன்றாக குணமாகி சீக்கிரம் வீட்டுக்கு போய்விடுவார்கள். எல்லோரும் சந்தோஷமாக இருங்கள்.
அவரை பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் கர்நாடகத்தில் இருந்து இங்கு வந்தேன் என்று சரோஜா தேவி கூறினார்.

சரோஜா தேவி தமிழில் பேசிய உடன், சில தெலுங்கு ஊடகவியலாளர்கள் தெலுங்கில் பேசும்படி கேட்டுக் கொண்டனர். அதற்கு சம்மதித்த சரோஜாதேவி, தெலுங்கிலும் ஜெயலலிதாவின் உடல் நலன் குறித்து பேசி அசத்தினார்.












Click it and Unblock the Notifications