அதிமுகவில் இன்னொரு சிதறு தேங்காய்.. விரைவில் உதயமாகும் திவாகரன் ஆதரவு அணி
அதிமுகவில் மேலும் ஒரு கோஷ்டியாக திவாகரன் ஆதரவு அணி உதயமாக உள்ளது.
சென்னை: அதிமுக சசிகலா கோஷ்டியில் தற்போது எடப்பாடி கோஷ்டி தனியாக உருவெடுத்திருக்கிறது. விரைவில் எடப்பாடி கோஷ்டியும் சிதறி திவாகரன் ஆதரவு அணி உதயமாகும் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
அதிமுக ஓபிஎஸ், சசிகலா கோஷ்டிகளாக உடைந்து சிதறியது. இந்த இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதற்காக தினகரன் குடும்பத்தினரை அதிமுகவில் இருந்து ஒதுக்கி வைக்கிறோம் என சசிகலா கோஷ்டி அறிவித்தது. இதையடுத்து அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக கொங்கு கோஷ்டி முளைத்தது.
எடப்பாடி கோஷ்டி
தங்களது அணியை வலுப்படுத்திக் கொள்வதில் எடப்பாடி தரப்பு தீவிரமாக களமிறங்கியது. இந்நிலையில் திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த தினகரன், அதிமுகவில் மீண்டும் தலையெடுக்கப் போவதாக அறிவித்தார்.
தினகரன் திட்டவட்டம்
அத்துடன் பெங்களூரு சென்று சிறையில் சசிகலாவையும் தினகரன் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்காக 60 நாட்கள் பொறுத்திருக்குமாறு சசிகலா கூறியுள்ளதாக தெரிவித்தார்.
எடப்பாடி கோஷ்டி உதயம்
ஆனால் அமைச்சர் ஜெயக்குமாரோ, தினகரன் குடும்பத்தினரை ஒதுக்கி வைத்துவிட்டோம்... அவரும் ஒதுங்கிவிட்டார்... அதையே தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என கறார் காட்டினார். இதனால் அதிமுக அதிகாரப்பூர்வமாக எடப்பாடி கோஷ்டி உதயமானது.
திவாகரன் கோஷ்டி வருது
உண்மையில் இது எடப்பாடி கோஷ்டியே அல்ல..கொங்கு மற்றும் திவாகரன் கோஷ்டிகள் இணைந்ததுதான் இந்த அணி. எடப்பாடிக்கு இப்போது முட்டுக் கொடுத்து வருவது திவாகரன் தரப்பு அமைச்சர்கள்தான்.. ஒரு கட்டம்வரைதான் எடப்பாடியை திவாகரன் கோஷ்டி தூக்கி எறியும் நாளும் தூரம் இல்லை என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.