ஒரு தலை காதலால் திருச்சி ஏர்போர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சிக்கிய வாலிபர்
சென்னை: ஒரு தலை காதலால் பிப்ரவரி மாதம் திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 17ம் தேதி திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இன்று காலை ஏர்போர்ட்டில் குண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பு துண்டிக்கப்பட்டது. விசாரணையில் அது புரளி என்று தெரிய வந்தது.
போலீசார் விமான நிலைய செல்போனுக்கு வந்த எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் தெரிய வந்துள்ளதாவது,
விமான நிலைய செல்போன் எண்ணுக்கு அழைப்பு வந்த எண் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி கீழவாடி தெருவில் வசிக்கும் முபாரக் உசேன்(50) என்பவரின் செல்போன் எண் ஆகும். அவர் தனது செல்போனை பேன்சி ஸ்டோரில் பணிபுரியும் திருவையாறைச் சேர்ந்த கவிதா என்பவரிடம் கொடுத்துள்ளார். லால்குடி குமுளூரைச் சேர்ந்த அலெக்சாண்டர் என்பவர் கவிதாவை ஒரு தலையாக காதலித்துள்ளார். இந்நிலையில் கவிதாவுக்கும் புள்ளம்பாடியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
குவைத்தில் வேலை செய்யும் அலெக்சாண்டருக்கு கவிதாவுக்கும் அபுதாபியில் பணிபுரியும் பிரபாகரனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து கவிதா தொடர்பாக அலெக்சாண்டரும், பிரபாகரனும் ஃபேஸ்புக்கில் மோதிக் கொண்டுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி இரவு அலெக்சாண்டர் கவிதாவின் செல்போனில் தொடர்பு கொண்டு செல்போன் நிறுவனம் என்று கூறி விமான நிலைய செல்போன் எண்ணை அவரிடம் அளித்துள்ளார். உனக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் வரும் அதை நான் தெரிவித்த செல்போன் எண்ணுக்கு அனுப்பி வை என்று கூறியுள்ளார்.
அந்த பெண்ணும் அனுப்பி வைத்து சிக்கினார். இந்நிலையில் குவைத்தில் இருந்த அலெக்சாண்டர் நேற்றுமுன் தினம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது குடியேற்ற அதிகாரிகளிடம் சிக்கினார். அவர்கள் அளித்த தகவலின் பேரின் திருச்சி விமான நிலைய அதிகாரிகள் போலீசாருக்கு தெரிவித்தனர். இதையடுத்து திருச்சி போலீசார் சென்னை வந்து அலெக்சாண்டரை கைது செய்து அழைத்து சென்றனர்.