வெங்காய லாரியும் - மோட்டார் சைக்கிளும் மோதல் - லாரி சாம்பல்.. பெட்ரோல் பங்க் தப்பியது!
தென்காசி: தென்காசி அருகே வெங்காயம் ஏற்றிவந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் லாரியும் இருசக்கர வாகனமும் தீக்கிரையானது.
புனேவில் இருந்து ஆலங்குளம் காய்கறி சந்தைக்கு 15 டன் வெங்காயம் ஏற்றிவந்த லாரி நேற்று செங்கோட்டையில் இருந்து தென்காசி நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது இலஞ்சிக்கும் தென்காசிக்கும் இடையே சென்றுகொண்டிருந்தபோது, அங்குள்ள வாகன எரிவாயு பங்க் முன்பாக வந்தபோது, தென்காசியில் இருந்து இலஞ்சி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் லாரியும் நேருக்கு நேராக மோதிக்கொண்டன.
இதில் பைக்கின் பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்தது. அந்த தீ, லாரி மீதும் பற்றியது. லாரியில் தீ மளமளவென பரவி வெங்காய லாரி முழுவதும் பற்றி எரிந்தது.
இதுக்குறித்து தகவல் அறிந்த தென்காசி, கடையநல்லூர் தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இதில் பைக்கில் வந்து தீக்காயமுற்ற இலஞ்சியை சேர்ந்த இசக்கிமுத்து (29), மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வெங்காய லாரியின் டிரைவர் ராஜன் விபத்திற்கு பிறகு தப்பிஓடிவிட்டார். வாகனங்களுக்கு கேஸ் நிரப்பும் பங்க்கிற்கு எதிராக தீ விபத்து நடந்தும் எந்த பாதிப்பும் இல்லை.இதுக்குறித்து குற்றாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.