ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய வேண்டும்! வணிகர் உரிமை முழக்க மாநாட்டில் தீர்மானம்!
ஈரோடு: ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய வேண்டும் என ஈரோட்டில் நடைபெற்ற வணிகர் உரிமை முழக்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதேபோல் விருத்தாச்சலம், துறையூர், ஆரணி, பொள்ளாச்சி ஆகிய நகரங்களை புதிய மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் மாநாட்டில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இது தொடர்பான தீர்மான விவரம் வருமாறு;
உயிர்காக்கும் மருந்து பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்யப்படுவதை கண்டிப்பாக தடுக்கப்பட வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கின்றது.

இந்திய வணிகம் விவசாயிகள் முதல், வீதியில் வணிகம் செய்வது வரை பல அடுக்கு பாரம்பரிய சங்கிலித் தொடரைக்கொண்டு மொத்தக் கொள்முதலிலிருந்து சில்லரை வணிகம் வரை, பல்வேறு நிலைகளில் பலரையும் வாழ்வித்துக் கொண்டிருக்கும் வணிக தொடர் அமைப்பாகும்.
அன்னிய நேரடி முதலீடுகள் மூலம் பெரும் வணிக நிறுவனங்களான அமேசான், பிளிப்கார்ட், லூலூ மார்ட் போன்றவை மூலம் இந்திய வணிகச் சங்கிலியை உடைத்து, தனித்தொரு நிறுவன லாப நோக்குடன் செயல்படுபவை என்பதனால், அவற்றிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி இந்திய வணிகச் சங்கிலி உடைந்து போகாமல், சிறு-குறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிட மத்திய, மாநில அரசுகள் முனைந்து நடவடிக்கை எடுத்திட வலியுறுத்துகின்றது.
மக்கள் புழக்கம் அதிகம் உள்ள இடங்கள், பெண்கள் நடமாடும் மார்க்கெட் பகுதிகள், கோவில்கள், பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் அமைந்துள்ள இடங்களில் இருக்கின்ற டாஸ்மாக் கடைகளை, பொதுமக்கள் நலன்கருதி தமிழக அரசு உடனடியாக அகற்றிட இம்மாநாடு வலியுறுத்துகின்றது.

தமிழக அரசு பிளாஸ்டிக் தடைக்கான உயர்நீதிமன்ற வழக்கில், அரசாணை எண்.37-ன்படி, மறுசுழற்சி இல்லா பிளாஸ்டிக்கை தடை செய்ததை, திரும்பப் பெறுவதற்கான பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருப்பது ஒருதலைப் பட்சமானது என்பதனால், மறு சுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் தடை அரசாணை எண்.84-யும் இயற்கை நீதியின்படி திரும்பப்பெற வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகின்றது.
எம்.எஸ்.எம்.இ பதிவு பெற்ற நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மின் கட்டண சலுகையினை வணிக நிறுவனங்களுக்கும் அமல்படுத்திடவும், உச்ச பயன்பாட்டுக் கட்டணம் என்பதை முழுமையாக தவிர்த்து ஒரே சீரான சாதாரண மின்| நேர மின் கட்டணத்தை முழுநேர பயன்பாட்டுக் கட்டணமாக அறிவித்திடவும் இம்மாநாடு வலியுறுத்துகின்றது.
விருத்தாச்சலம், துறையூர், ஆரணி, பொள்ளாச்சி ஆகிய நகரங்களை புதிய மாவட்டங்களாக அறிவித்து விருத்தாச்சலம், துறையூர் ஆரணி மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதி வளர்ச்சிக்கு வழிவகுத்திடுமாறு தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகின்றது.












Click it and Unblock the Notifications