கருணாநிதி குறித்து செம்மலை, ராஜன் செல்லப்பா சர்ச்சை பேச்சு...சட்டசபையில் திமுகவினர் கடும் அமளி!!
சென்னை: சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய அதிமுக உறுப்பினர் செம்மலை, முரண்பாட்டின் மொத்த உருவம் கருணாநிதி என்று கூறியதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர்.
இதேபோல அதிமுக உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேசிய போது, விஞ்ஞான ரீதியான ஊழல் செய்பவர் கருணாநிதி என சர்க்காரிய கமிஷன் கூறியுள்ளதாக தெரிவித்ததற்கு, சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
பெரும் எதிர்பார்ப்புக்கிடையே சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. பெரும்பான்மையான ஆளுங்கட்சி, வலுவான எதிர்கட்சி என அமைந்துள்ள சட்டசபையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

செம்மலை பேச்சு
மேட்டூர் தொகுதி அதிமுக உறுப்பினர் செம்மலை, சட்டசபையில் கருணாநிதி பற்றியும் எதிர்க்கட்சிகள் குறித்தும் தொடக்கத்திலேயே விமர்சித்ததால் திமுக உறுப்பினர் அமளியில் ஈடுபட்டனர். அதிமுக உறுப்பினர்களும் கார சார விவாதத்தில் ஈடுபட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.

ஸ்டாலினுக்கு விளக்கம்
ஆளுநர் உரையை அம்மா காலண்டர் என சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசியதற்கு விளக்கம் அளித்தார் செம்மலை. எதிர்காலத்தில் அரசு செய்ய உள்ள திட்டங்களின் பட்டியலையே காலண்டர் என்ற வார்த்தை குறிப்பிடுவதால், ஸ்டாலின் கூறியது பொருத்தமானதே என பேசினார்.

கருணாநிதி பற்றி பேச்சு
திமுக தலைவர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்தார் செம்மலை. கண் தெரிந்தவர்கள் பாராட்டுவார்கள் என்றும், கண் தெரியாதவர்கள் பாராட்ட மாட்டார்கள் என்றும் செம்மலை கூறினார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திமுகவினர் எதிர்ப்பு
அவையில் இல்லாதவர் குறித்து பேசுவதா என திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதற்குப் பதில் அளித்துப் பேசிய செம்மலை, கருணாநிதி சட்டசபை உறுப்பினர் என்பதால், அவர் அவையில் இல்லாவிட்டாலும் கருணாநிதி குறித்து பேசலாம் என தெரிவித்தார்.

முரண்பாட்டின் மொத்த உருவம்
தொடர்ந்து பேசிய செம்மலை, சமஸ்கிருதத்தை எதிர்க்கும் கருணாநிதி, தனது குடும்பத்தினருக்கு சமஸ்கிருதத்தில் பெயர் வைப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார். முரண்பாட்டின் மொத்த உருவம் கருணாநிதி என்று குறிப்பிட்டார் செம்மலை. கருணாநிதியின் பெயரை குறிப்பிட்டதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஒபிஎஸ் விளக்கம்
அப்போது எழுந்த ஓ.பன்னீர் செல்வம், கருணாநிதியை பற்றி பேசும் போது அவரது பெயரை கூறாமல் எப்படி பேசுவது என்று கேட்டார். செம்மலை பேசியதில் தவறு இல்லை என்றும் அவை முன்னவர் ஓ.பன்னீர் செல்வம் விளக்கம் அளித்தார்.

திமுகவினர் கொந்தளிப்பு
ஓபிஎஸ் பேச்சுக்கு சமாதானம் அடையாத திமுகவினர், சட்டசபையில் கருணாநிதியின் பெயரை குறிப்பிட எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் பேரவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

அமளி துமளி
எந்த பொறுப்பிலும் இல்லாத ஒரு உறுப்பினரின் பெயரை சொல்லித்தான் பேச முடியும் என்று சபாநாயகர் தனபால் கூறினார்.
இதேபோல முதல்வர் ஜெயலலிதாவின் பெயரை நாங்கள் கூறலாமா என்று திமுக உறுப்பினர் துரைமுருகன் கேட்கவே, அதற்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவை அமளி துமளியானது.

ராஜன் செல்லப்பா பேச்சு
அவை தொடர்ந்து நடைபெற்றது அதிமுக உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேசும் போது, விஞ்ஞான ரீதியான ஊழல் செய்பவர் கருணாநிதி என சர்க்காரிய கமிஷன் கூறியுள்ளதாக தெரிவித்தார். இதனைக் கேட்ட திமுகவினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

சபாநாயகர் இருக்கை முற்றுகை
ராஜன் செல்லப்பா பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கவேண்டும் என்று வலியுறுத்தி சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக சென்று முழக்கமிட்டனர், இதனால் அவை மீண்டும் அமளி துமளியானது. பெரும் அமளிக்கிடையேயும் விவாதம் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications