"மெர்ரி கிறிஸ்துமஸ்" சொல்லவே இல்லை ஓ.பி.எஸ்..!
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தீபாவளி வாழ்த்து சொல்லாதது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் அவர் வாழ்த்து தெரிவிக்க மறந்தார்.
ஓ.பன்னீர் செல்வம் முதல்வரான பின்னர் வந்த தீபாவளிப் பண்டிகைக்கு அவர் வாழ்த்து தெரிவிக்கவில்லை. அதேசமயம் ஆளுநர் உள்ளிட்ட பிற தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். ஆனால் முதல்வரும் வாழ்த்து தெரிவிக்கவில்லை. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் வாழ்த்து தெரிவிக்கவில்லை.
ஜெயலலிதா சிறைத் தண்டனை பெற்று பதவியை இழந்த பின்னர் முதல்வரான ஓ.பன்னீர் செல்வம், முக்கியப் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதே இல்லை. முதல்வர் என்ற அந்தஸ்தில் ஜெயலலிதா வாழ்த்து கூற முடியாத நிலை இருப்பதால், ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவிப்பதைத் தவிர்த்து வருகிறார்.
இந்த வரிசையில் அதிமுக சார்பில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாடப்படவில்லை. கிறிஸ்துமஸுக்கு வாழ்த்தும் தெரிவிக்கவில்லை. முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவிக்கவில்லை.
அடுத்து ஆங்கிலப் புத்தாண்டு வருகிறது, போகிப் பண்டிகை வருகிறது, மாட்டுப் பொங்கல் வருகிறது. பொங்கல் வருகிறது. காணும் பொங்கல் வருகிறது.. ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டும் வரப் போகிறது.. என்ன பண்ணப் போறாங்களோ!