எம்எல்ஏக்களை மீட்க கூவத்தூர் போன ஓபிஎஸ் குழு தடுத்து நிறுத்தம் - பாதியில் திரும்பினர்
ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், செம்மலை ஆகியோர் ரிசார்ட்டில்அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை மீட்கப் போன போது கோவளம் அருகே தடுத்து நிறுத்தப்பட்டதால் பாதியில் திரும்பினர்.
சென்னை: கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் சசிகலாவினால் சிறைவைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை மீட்க முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், எம்எல்ஏ செம்மலை நத்தம் விஸ்வநாதன், பொன்னையன் ஆகியோர் கூவத்தூருக்கு சென்றனர். அனைவரையும் கோவளம் அருகே தடுத்து நிறுத்திய போலீசார், திருப்பி அனுப்பினர்.
கடந்த ஒருவார காலமாக அதிமுகவில் அதிகாரப்போட்டி நடந்து வருகிறது. முதல்வர் நாற்காலி யாருக்கு என்ற போட்டியில் ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரு அணிகளாக பிரிந்தன. சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் ஒருவார காலமாக கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டனர். 8 எம்எல்ஏக்கள், 11 எம்.பிக்கள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு அளித்தனர்.
சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் கூவத்தூரில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இரு தினங்களாக கூவத்தூர் சென்று பேசி வந்த சசிகலா, நேற்று இரவு முதல் சசிகலா கூவத்தூர் ரிசார்ட்ஸ்சில் தங்கியுள்ளார்.
இன்று உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை அளித்தது. அதில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் சசிகலாவின் முதல்வர் கனவு கலைந்தது. இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக சட்டசபைக்குழு தலைவராக எம்எல்ஏக்கள் தேர்வு செய்துள்ளனர். அவர் ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார்.
ஓபிஎஸ் அழைப்பு
இதனைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்றும், கசப்புகளை பிரிந்து ஒற்றுமையாக நாம் அதிமுக ஆட்சியை தொடருவோம் என்று கூறினார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் ஜெயலலிதாவின் ஆன்மா உயிரோடுதான் இருக்கிறது என்பது இன்று உறுதியாகியுள்ளதாக பேசினார்.
ஓபிஎஸ் நன்றி
தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி கூறிய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் எம்எல்ஏக்களை மீட்க கூவத்தூர் ரிசார்ட்ஸ்க்கு செல்லப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் செல்லவில்லை. அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், எம்எல்ஏ செம்மலை, பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் சென்றனர். அவர்கள் அனைவரும் கோவலம் அருகே தடுத்து நிறுத்தப்பட்டனர்.
144 தடை உத்தரவு
உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியான உடனேயே அதிரடிப்படை போலீஸ் கூவத்தூர் ரிசார்ட்ஸ்க்குள் நுழைந்துள்ளது. அரசு பேருந்துகளும் கூவத்தூருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. கூவத்தூர் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. பதற்றம் அதிகரித்துள்ளது. இதனை காரணம் காட்டியே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
எங்களுடன் வருவார்கள்
முன்னதாக கூவத்தூர் செல்லும் வழியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், அனைத்து எம்எல்ஏக்களும் எங்களுடன் வருவார்கள் என்ற நம்பிக்கையிருக்கிறது. ரிசார்ட்டில் தங்கியுள்ள அனைவரையும் அழைத்து வர சென்று கொண்டிருக்கிறோம் என்றும் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார். போலீஸ் தடுத்து நிறுத்தியதால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பாதி வழியில் திரும்பினர். அனைவரும் மாலைக்குள் திரும்புவார்கள் என்று காவல்துறையினர் உறுதி அளித்ததை அடுத்து அனைவரும் திரும்பினர்