தமிழ்நாட்டில் நடக்கும் போராட்டங்களுக்கு பின்னணியில் ஒபிஎஸ்... திண்டுக்கல் சீனிவாசன் 'பகீர்'
தமிழ்நாட்டில் நடந்து வரும் போராட்டங்களுக்குப் பின்னணியில் ஓபிஎஸ் மற்றும் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்கள் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
சேலம்: தமிழ்நாட்டில் நடக்கும் போராட்டங்களின் பின்னணியில் ஒ.பன்னீர்செல்வம் இருக்கிறார் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பகீர் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.
சேலத்தில் வனவிலங்கள் பாதுகாப்பு குறித்து கருத்தரங்கம் நடந்தது. அதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு பேசினார். அக்கூட்டத்தில் இந்த கடும் கோடையில் வனவிலங்குகளுக்கு சிரமமின்றி தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்வது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன்,'' தமிழ்நாட்டில் நடக்கும் போராட்டங்களின் பின்னணியில் ஓபிஎஸ்ஸும் மு.க ஸ்டாலினும் தான் இருக்கிறார்கள். மு.க ஸ்டாலின் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காகத்தான் ஒபிஎஸ் பாடுபடுகிறார்'' என்று கூறினார்.
மேலும், ''தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவி வரும்போதும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விலைவாசியைக் கட்டுக்குள் வைத்திருக்கிறார்'' என்று கூறியவர், அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்துப்பேசும்போது,''எங்கள் தரப்பில் பேச்சுவார்த்தைக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தோம். ஆனால் பன்னீர் செல்வம் அணி தூங்குவது போல் நடிக்கிறார்கள்'' என கூறினார்.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக மக்கள் டாஸ்மாக்குக்கு எதிராக பெரும்பான்மையான பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த போராட்டங்கள் அரசுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. இந்த டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்கள், தன்னெழுச்சியாக குடிக்கு எதிராக பொதுமக்களே போராடி வருகின்றனர்.
ஆனால் தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களுக்கு பின்னணியில் ஓபிஎஸ் இருக்கிறார் என திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டுவது ஒபிஎஸ் கோஷ்டியை வெறுப்பு மனநிலைக்கு இட்டுச் செல்வதற்கு கூறும் வார்த்தைகள் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.