ஆளுநருடன் முதல்வர் ஓபிஎஸ் 15 நிமிடம் ஆலோசனை! சசிகலா 'ஏழரை'க்கு சந்திப்பு!
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று சந்தித்தார். இதைத் தொடர்ந்து இரவு ஏழரை மணிக்கு சசிகலாவை சந்திக்க ஆளுநர் நேரம் ஒதுக்கியுள்ளார்.
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று சந்தித்து பேசினார். சுமார் 15 நிமிடம் நீடித்த இச்சந்திப்பில் தமது ராஜினாமா வாபஸ், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பது குறித்து ஆளுநருடன் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல்வராக பதவியேற்க ஆயத்தமாகி வருகிறார். பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டிய தமிழக பொறுப்பு ஆளுநர் மும்பை சென்று விட்டதால் பதவியேற்பு தள்ளிப் போனது.

இதனிடையே தன்னை மிரட்டி நிர்பந்தப்படுத்தி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து வாங்கியதாக ஓ.பன்னீர் செல்வம் திங்கட்கிழமை இரவு கூறினார். இதனையடுத்து தமிழகத்தில் அடுத்தடுத்து அதிரடி காட்சிகள், திடீர் திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.
தமிழக அரசியல் நிலவரத்தை ஆளுநர் மும்பையில் இருந்து உன்னிப்பாக கவனித்து வருகிறார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்தார்.
மும்பையில் இருந்து நண்பகல் 12 மணிக்கு சென்னை புறப்பட்ட அவர் 3.30 மணிக்கு சென்னை வந்த அவர் ஆளுநர் மாளிகையில் தங்கியுள்ளார். மாலை 5 மணிக்கு சந்தித்து பேச ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆளுநர் நேரம் ஒதுக்கியுள்ளார்.
இதனையொட்டி ஓ.பன்னீர் செல்வம் ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அவருடன் நத்தம் விஸ்வநாதன், மதுசூதனன், பிஎச் பாண்டியன் மற்றும் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சென்றனர். இச்சந்திப்பின் போது தமது ராஜினாமாவை வாபஸ் பெறுவது மற்றும் சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிப்பது குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து பேச சசிகலாவுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியலில் குழப்பம் நிலவுவதால் ஆளுநர் வருகை, ஓபிஎஸ் சந்திப்பு என தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications