விஜயகாந்த் மாநாடு போட்ட இடத்தில் அம்மா பேசுவதா.. டென்ஷனான ஓ.பி.எஸ்.!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் தேமுதிக மாநாடு நடந்த இடத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் பிரசாரக் கூட்டத்திற்கு மேடை போடலாமா என்று அதிமுகவினர் ஆலோசனை நடத்த, அதைக் கேட்டு டென்ஷனாகி விட்ட ஓ.பன்னீர் செல்வம் அந்த இடத்தை நிராகரித்து விட்டு வேறு இடத்தைத் தேர்வு செய்து அம்மாவின் கோபப் பார்வையில் சிக்குவதிலிருந்து தப்பியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா சூறாவளி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். முதல் ஆளாக வேட்பாளர்களை அறிவித்து விட்டு, தேர்தல் அறிக்கையையும் வெளியிட்ட அவர் தற்போது தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
மற்ற கட்சிகளெல்லாம் தட்டுத் தடுமாறித் தடவிக் கொண்டிருக்க அதிமுக மட்டும்தான் படு தெளிவாக தேர்தல் களத்தில் நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் பிரசார மேடை அமைப்பு, பிரசார இடம் உள்ளிட்டவற்றை வாஸ்து உள்ளிட்டவற்றைப் பார்த்துப் பார்த்து தேர்வு செய்து வருகிறார் நிதியமைச்சரான ஓ.பன்னீர் செல்வம்.
தூத்துக்குடியில்
தூத்துக்குடியில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் செய்வார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திடீரென பிரசார தேதி மார்ச் 15க்கு மாற்றப்பட்டது.
அண்ணா நகர் சரியில்லை
வழக்கமாக தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில்தான் அதிமுக கூட்டங்கள் நடைபெறும். அங்குதான் முதல்வர் பங்கேற்கும் கூட்டங்களும் நடைபெறும். அந்தக இடம் நெரிசலான பகுதி என்பதால் அதை ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அமைச்சர் குழு வேண்டாம் என்று கூறி விட்டது.
தபால் தந்தி காலனி ஓ.கேவா...
இதையடுத்து தபால் தந்தி காலனி மைதானத்தை காட்டியுள்ளார் அமைச்சர் சண்முகநாதன். ஆனால் அது ராசியில்லாத இடம் என்று அவசரம் அவசரமாக அதிமுகவினர் கூறியுள்ளனர்.
ரொம்ப மோசமான இடம்
அந்த இடத்தில், சில மாதங்களுக்கு முன்பு அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் அழைக்கப்பட்டிருந்தார். அந்த கூட்டம் நடந்து முடிந்த மறுவாரமே வைகைச்செல்வனின் அமைச்சர் பதவி காலியானது.
காலாவதியாகிப் போன தினகரன், வெங்கடேஷ்
அதேபோல், இந்த இடத்தில் பிரசாரம் செய்த டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது தம்பி வெங்கடேஷ் தற்போது அரசியலிலேயே இல்லை.
தேமுதிக மாநாடும் இங்கதானே நடந்துச்சு
இதுதவிர, தேமுதிக மாநாடும் இதே இடத்தில்தான் நடத்தப்பட்டது. அதன் பிறகுதான் அது பெரும் குழப்ப கட்சியாக மாறி நிற்கிறது. எனவே இது ராசிப்படி சரியாக வராது என்று சொல்லியுள்ளனர்.
என்னது.. விஜயகாந்த் கட்சி மாநாடு நடந்த இடமா...
மற்றவற்றைக் கூட ஓ.பன்னீர் செல்வம் பெரிதாக பார்க்கவில்லை. ஆனால் விஜயகாந்த் கட்சி மாநாடு நடந்த இடம் என்ற விஷயம்தான் அவரை டென்ஷனாக்கி விட்டதாம். இந்த இடத்தில் அம்மா கூட்டமா கூடவே கூடாது என்று கூறிய அவர் உடனடியாக அந்த இடத்தை நிராகரித்து விட்டாராம்.
வேல் வேல் கதிர்வேல்..
இதையடுத்து தற்போது கதிர்வேல் காலனி மைதானத்தை தேர்வு செய்துள்ளனராம். அந்த இடத்தில் தற்போது நாடாளுமன்ற வடிவில் பிரமாண்ட மேடை போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.