கோவையில் 6 ஆதரவாளர்கள் காங்கிரசில் இருந்து நீக்கம்: இளங்கோவனுக்கு ப.சிதம்பரம் கண்டனம்
சென்னை: கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தமது 6 ஆதரவாளர்கள் நீக்கப்பட்டதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பொறுப்பு ஏற்றதில் இருந்து அவருக்கும் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாவும் மேலிட பொறுப்பாளரும் இரண்டு தரப்பிலும் உரிய விளக்கம் கேட்டு சமாதனம் செய்து வைத்தனர்.
இந்நிலையில் ஐ.என்.டி.யு.சி. பொதுச் செயலாளர் கோவை செல்வம், பேரூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் வி.திருமூர்த்தி, முன்னாள் மாநகரச் செயலாளர் காட்டூர் சோமு, சிறுபான்மையினர் பிரிவுத் தலைவர் ஏ.எம்.ரபீக், முன்னாள் கவுன்சிலர் ராம்நகர் சீனிவாசன், காங்கிரஸ் சேவாதளம் மாவட்டத் தலைவர் ஹரிகரன் ஆகியோர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக கடந்த 15-ந் தேதி தமிழக காங்கிரஸ் அறிவித்திருந்தது.
நீக்கப்பட்ட இந்த 6 பேருமே ப. சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் ஆவர். இந்நிலையில் ப.சிதம்பரம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஆறு உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. ஒருவரிடம் விளக்கம் கேட்காமலும், விசாரணை நடத்தாமலும், ஒழுங்கு நடவடிக்கை குழுவின் ஒப்புதலைப் பெறாமலும் கட்சியின் உறுப்பினரை நீக்க முடியாது.
இந்த நடவடிக்கையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இந்த நிகழ்வைக் கருத்தில் கொண்டு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications