பச்சை தமிழகம் புதிய கட்சியை தொடங்கினார் சுப. உதயகுமார்
சென்னை: பச்சை தமிழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார் சுப.உதயகுமார்.
சென்னை: கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் பச்சைத் தமிழகம் என்ற புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட பச்சை தமிழகம் என்ற அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளதாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்தார்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தமது போராட்டத்திற்கு எந்த அரசியல் கட்சியும் உடன்படாததால் உரிமைகளை பாதுகாக்க புதிய கட்சி தொடங்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக கூறினார்.
ஆம் ஆத்மி கட்சி டெல்லியை வைத்து மட்டுமே தமிழகத்திலும் அரசியல் செய்வதாகவும், தமிழக பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காததால் அக்கட்சியை விட்டு வெளியேறியதாகவும் உதயகுமார் தெரிவித்தார்.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தமது கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்றும் அவர் கூறினார். பசுமை தமிழகத்தை விரும்பும் அமைப்புகளை ஒருங்கிணைத்து தேர்தலை சந்திக்க உள்ளதாகவும், கட்சிகள் உடனான கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பச்சைத்தமிழகம் இயக்கம் பற்றி பேசிய சுப. உதயகுமார் , இது ஒரு அரசியல் இயக்கம். ஆனால் தேர்தலுக்கு ஆயத்தம் செய்கிற அரசியல் கட்சி அல்ல என்று கூறியிருந்தார். இந்த இயக்கத்தில் எந்த அரசியல் கட்சியில் இருப்பவர்களும், எந்த இயக்கத்தில் இருப்பவர்களும், தங்களது அடையாளங்களை இழக்காமல் சேரலாம். ஆனால் பச்சைத்தமிழகம் இயக்கத்தின் கருத்துக்களை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அதிகார பரவல், பங்கேற்பு ஜனநாயகம், பெண் விடுதலை, இயற்கையை அழிக்காத வளம்குன்றா வளர்ச்சி முறை, இயற்கை வேளாண்மை, சிறு நடுத்தர தொழில், மரபு சார்ந்த மக்கள் அமைப்புகள் ஆகியவைகள்தான் இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.
தமிழகத்தில் இன்று ஒரு மடைமாற்று தந்திரம் நடந்து கொண்டு இருக்கிறது. மக்களை குடிகாரர்களாக்கி கையறு நிலைக்கு தள்ளி அவர்களை கையேந்துபவர்களாக, இலவசங்களை கண்டு ஏமாறுபவர்களாக மாற்றி வருகிறார்கள். அதற்கு இந்த இயக்கம் முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் கூறினார். இந்த நிலையில் பச்சை தமிழகம் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார் சுப. உதயகுமார்.