ஜாகீர் ஹூசைன் கைது வழக்கில் பாக். தூதரக அதிகாரிகள் பெயர் சேர்ப்பு
சென்னை: சென்னையில் ஐ.எஸ்.ஐ உளவாளி கைது செய்யப்பட்ட வழக்கில் இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் சித்திக், பாஸ் என்கிற ஷா இருவரின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை திருவல்லிக்கேணியில் கடந்த 29-ஆம் தேதி இலங்கை கண்டியைச் சேர்ந்த முகம்மது ஜாகிர் ஹூசேன், கியூ பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ஐ.எஸ்.ஐ. உளவாளி என தெரியவந்தது.
ஜாகீர் ஹூசேனுக்கு இலங்கையில் இருக்கும் பாகிஸ்தான் துணைத் தூதரகத்தின் அதிகாரியான ஆமீர் சுபேர் சித்திக் என்பவர் உதவியுள்ளார். அவர்தான் தன்னை ஐ.எஸ்.ஐ. உளவாளியாக மாற்றினார் என்றும் போலீஸ் விசாரணையில் கூறியுள்ளார்.
தமிழகத்திற்குள் ஊடுருவல்
மேலும் விசாரணையில் உசேன், துணி வியாபாரம் செய்வதாக போலி பாஸ்போர்ட் மூலம் தமிழகத்துக்குள் ஊடுருவி கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டிருப்பதும், சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம், பெங்களூருவில் உள்ள இஸ்ரேல் நாட்டு துணைத் தூதரகம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்துவற்காக அவற்றை புகைப்படம் எடுத்திருப்பதும் தெரியவந்தது.
இதேபோல கொச்சி, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள கடற்படைத் தளங்கள் குறித்து தகவல்களைச் சேகரித்திருப்பதும் தெரியவந்தது.
போலீஸ் காவலில் விசாரைணை
இந்த வழக்கில் மேலும் தகவல்களைத் திரட்டுவதற்காக, உசேனை காவலில் எடுத்து விசாரிக்க கியூ பிரிவு போலீஸார் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து எழும்பூர் 13-ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் அனுமதி கேட்டு திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், உசேனிடம் 3 நாள்கள் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது.
சிறையில் 6 ஆண்டுகள்:
இந்த உத்தரவின்படி, கடந்த இரண்டு நாள்களாக ஹூசேனிடம் க்யூ பிரிவு போலீஸார் பல கட்டங்களாக விசாரணை செய்து வருகின்றனர். இதில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. விசாரணையில் உசேன் வெளியிட்ட தகவல்கள் குறித்து போலீஸார் கூறியது.
போலி பாஸ்போர்ட்
போலி பாஸ்போர்ட் மூலம் ஆள்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் வேலை செய்து வந்துள்ளார் உசேன். இது தொடர்பாக பல முறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தீவிரவாத அமைப்புகள்
போலி பாஸ்போர்ட் வழக்கில் சிங்கப்பூரில் 4 ஆண்டுகள், தாய்லாந்தில் ஒரு ஆண்டு, இலங்கையில் ஒரு ஆண்டு என மொத்தம் 6 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். சிறையில் இருந்த காலகட்டத்தில் சில பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்புகளின் நிர்வாகிகளோடு தொடர்பு கிடைத்துள்ளது.
இருவர் ஊடுவல்
அந்த தொடர்பு மூலம் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளின் அறிமுகம் கிடைத்ததாம். போலி பாஸ்போர்ட்டுகளை ஹூசேன் நேர்த்தியாக தயாரிப்பதைப் பார்த்த ஐ.எஸ்.ஐ. அதிகாரிகள் அவரை உளவு வேலைக்கு நியமித்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக அவரை தமிழகத்துக்கு அனுப்பினர். மேலும் அவர் தயாரித்த போலி பாஸ்போர்ட் மூலம் மேலும் 2 பேரை தமிழகத்துக்குள் ஊடுருவ வைத்துள்ளனர்.
தூதரகங்களுக்குக் குறி
சென்னைக்கு துணி வியாபாரி என்ற போர்வையில் வந்த உசேன், இங்கு அமெரிக்க துணைத் தூதரகம், பெங்களூருவில் உள்ள இஸ்ரேல் துணைத் தூதரகம் ஆகியவற்றை பற்றி தகவல்களைத் திரட்டி, புகைப்படங்களையும் எடுத்துள்ளார்.
பெங்களூருவில் வீடு
இஸ்ரேல் தூதரகத்தை முதலில் தாக்குவதற்காக பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் வாடகைக்கு வீடு பார்க்குமாறு ஐ.எஸ்.ஐ. அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். அங்கு சென்று பல நாள்கள் முகாமிட்டு வீடு தேடி உள்ளார். ஆனால், மொழிப் பிரச்னை ஏற்பட்டதால், வாடகைக்கு பாதுகாப்பான வீடு கிடைக்கவில்லையாம்.
தமிழகத்தில் குழப்பம்
வட மாநிலங்களில் உள்ள தீவிரவாத இயக்கங்கள் மூலம் குண்டு வெடிப்புச் சம்பவங்களை தொடர்ச்சியாக செய்து வரும் ஐ.எஸ்.ஐ. அமைப்பால், தமிழ்நாட்டில் குண்டு வெடிப்புகளை நடத்த முடியவில்லை என்பதோடு பெரிய அளவில் மத பிரச்னைகளையும் ஏற்படுத்த முடியவில்லை. அதை தகர்க்கும் வகையில், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் முக்கியமான இடங்களின் தகவல்களையும், புகைப்படங்களையும் சேகரிக்க தனக்கு ஐ.எஸ்.ஐ. அதிகாரிகள் உத்தரவிட்டிருக்கின்றனர்.
6 முறை சென்னையில்
சென்னை உயர் நீதிமன்றம், டிவி ஒளிபரப்பு கோபுரம், சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் அமெரிக்க துணை தூதரகம் ஆகியவற்றை தகர்க்க திட்டமிட்டிருந்தாகவும், பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ அமைப்பின் உத்தரவின்பேரில், இந்த இடங்களின் புகைப்படங்களை எடுத்து அனுப்பியதாகவும், அவை தெளிவாக இல்லாததால் மீண்டும் படம் பிடிக்க சென்னை வந்ததாகவும் கூறியுள்ளான்.
தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக இதுவரை 6 முறை தமிழகம் வந்துள்ளதாகவும், இறுதியாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னை வந்ததாகவும் தெரிவித்துள்ளான்.
சிறையில் அடைப்பு
இதையடுத்து போலீஸ் காவல் முடிந்ததையடுத்து இன்று மீண்டும் ஜாகீர் உசேன், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். ஜாகீர் உசேனை வரும் 13ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி சிவசுப்பிரமணியன் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவன் புழல் சிறையில் அடைக்கப்பட்டான்.
அதிகாரிகள் பெயர் சேர்ப்பு
ஜாகீர் ஹூசைனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் சித்திக், பாஸ் என்கிற ஷா இருவரின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த மத்திய அரசின் உதவியை நாட காவல்துறை திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications