களை கட்டும் தேர்தல் திருவிழா... "பந்தோபஸ்து"க்காக சென்னை வந்தனர் துணை ராணுவத்தினர்
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக இன்று 18 கம்பெனிகளைச் சேர்ந்த துணை ராணுவத்தினர் சென்னை வந்துள்ளனர்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ளன. இத்தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. எனவே, தேர்தல் பாதுகாப்பு பணியில் கூடுதல் துணை ராணுவப் படையினரை ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.
முன்னதாக தமிழக தேர்தல் பாதுகாப்புக்காக முதலில் 275 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் மட்டுமே வருவதாக இருந்தது. ஆனால், அதனைத் தொடர்ந்து பறக்கும் படையில் கூடுதல் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

கூடுதல் வீரர்கள்...
இதனால், 300 கம்பெனி ராணுவ வீரர்கள் தமிழகத்திற்கு வருகிறார்கள். ஒரு கம்பெனியில் 72 முதல் 100 வீரர்கள் இருப்பார்கள். வடமாநிலங்களில் இருந்து துணை ராணுவ வீரர்கள் தனி ரயில் மூலம் தமிழகம் வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை வந்தனர்...
இந்நிலையில், ரயில் மூலமாக தமிழக சட்டசபைத் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 18 கம்பெனிகளைச் சேர்ந்த துணை ராணுவத்தினர் கொல்கத்தாவிலிருந்து இன்று சென்னை வந்துள்ளனர். இன்னும் சில நாட்களில் மேலும் துணை ராணுவத்தினர் தமிழகம் வர உள்ளனர்.

பாதுகாப்பு...
மொத்தம் ஐந்து ஆயிரத்திற்கும் அதிகமான துணை ராணுவ வீரர்கள் நேற்றும், இன்றும் தமிழகம் வந்துள்ளனர். தமிழகம் முழுவதும் பதற்றமானவைகளாகக் கருதப்படும் வாக்குச்சாவடிகளில் இவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உத்தரவு...
தற்போது தமிழகம் வந்துள்ள துணை ராணுவத்தினர், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்ட தலைநகரங்களில் உள்ள எஸ்.பி., அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications