நாடாளுமன்றத்துக்குதான் அதிகாரம்- மீண்டும் உச்சநீதிமன்றத்துடன் மோதும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்!
டெல்லி: நாட்டில் நாடாளுமன்றத்துக்குதான் அதிக அதிகாரம் உண்டு; நாடாளுமன்றத்தைவிட உயர்ந்த அதிகாரம் கொண்ட அமைப்பு எதுவுமே இல்லை என்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கூறியிருப்பது மீண்டும் சர்ச்சையாகி உள்ளது.
தமிழ்நாடு அரசின் வழக்கில், உச்சநீதிமன்றமானது ஆளுநர்கள்- ஜனாதிபதிகள் மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலவரையறை நிர்ணயம் செய்தது. இதனை அனைத்து மாநிலங்களும் வரவேற்றுள்ளன. ஆனால் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் மற்றும் சில மாநில ஆளுநர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியிலும் மீண்டும் உச்சநீதிமன்றத்தை சீண்டியிருக்கிறார் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற இந்திய அரசியலமைப்பின் 75 ஆண்டுகளை நினைவுகூரும் நிகழ்ச்சியான 'கர்த்தவ்யம்' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டெல்லி பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவரும், அலுவல்சார் வேந்தருமான துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜெகதீப் தன்கர், அரசியலமைப்பு பதவிகள், சடங்குகள் அல்லது அலங்காரமாக இருக்கலாம் என்று சிலர் சமீபத்தில் கூறியுள்ளது தனக்கு நினைத்துப் பார்க்க முடியாத புதிராக உள்ளதாகக் கூறினார். தம்மைப் பொறுத்தவரை, ஒரு குடிமகன் மிக உயர்ந்தவர் என்றும், ஏனென்றால் ஒரு நாடும் ஜனநாயகமும் குடிமக்களால் கட்டமைக்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார். ஜனநாயகத்தின் ஆன்மா ஒவ்வொரு குடிமகனுக்குள்ளும் இடம் பெற்றுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்திற்கு மேலே எந்தவொரு அதிகாரமும் அரசியலமைப்பில் காட்சிப்படுத்தப்படவில்லை. நாடாளுமன்றம்தான் உச்ச நிலை என்றும், நாட்டின் ஒவ்வொரு தனி மனிதனைப் போலவே இதுவும் உயர்ந்தது என்றும் ஜெகதீப் தன்கர் கூறினார்.
மக்களை விட யாரும் உயர்ந்தவர்கள் அல்ல. மக்களாகிய நாம், அரசியலமைப்பின் கீழ், நமது விருப்பத்தை மக்கள் பிரதிநிதிகள் மூலம் பிரதிபலிக்க தேர்வு செய்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார். 'நெருக்கடி நிலையை' அமல்படுத்திய பிரதமர் 1977இல் அதற்கு பொறுப்பாக்கப்பட்டார். எனவே, இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஏனெனில் அரசியலமைப்பு மக்களுக்கானதாகும் என்று தன்கர் கூறினார்.












Click it and Unblock the Notifications